4ஜி தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன-ராஜா
ஊட்டி: 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில், நான்காம் தலைமுறை 4ஜி தொழில்நுட்பம் தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
2ஜி ஏலத்தை விட பல மடங்கு லாபத்தை 3ஜி லாபத்தில் மத்திய அரசு கண்டுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த அந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ. 1.06 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது.
இந்த நிலையில் அடுத்த மேம்பட்ட தொழில்நுட்பமான 4ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான பூர்வாங்கப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 4ஜி தொடர்பான கருத்துக்களை வழங்குமாறு தொழி்ல் நிறுவனங்கள், பங்குதாரர்களை சில வாரங்களுக்கு முன்பு கேட்டுக் கொண்டுள்ளது ட்ராய்.
இதுதொடர்பான கருத்துக்கள் பெறப்பட்ட பின்னர், ட்ராய் பரிந்துரையின் அடிப்படையில் 4ஜி தொடர்பான பணிகள் முழுமையாக தொடங்கும்.
உலக செம்மொழி மாநாட்டுக்காக கோவையில், மாநாடு நடைபெறும் இடத்தில் தொலைபேசி சேவை மற்றும் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்க வேண்டும் என்பதற்காக 130 டவர்களையும், 20 மொபைல் வேன்களையும் நிறுவியுள்ளோம் என்றார்.
4வது தலைமுறை தொலைபேசி தொழில்நுட்பமான 4ஜிக்கு அல்ட்ரா பிராட்பேண்ட் என்றும் இன்னொரு பெயர் உண்டு. இதில் அதி விரைவாக டவுன்லோட் செய்ய முடியும். மேலும் உயர் தரத்தில், படு துல்லியமாக வீடியோ படங்களையும் இகாண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.