தமிழில் வழக்காட அனுமதி கோரி ஜனாதிபதியிடம் ஜெ-வைகோ-தா.பாண்டியன் மனு!
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காடும் உரிமை கோரி மாநிலம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தக்கு அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன.
இந் நிலையில் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் இணைந்து ஒரு மனு கொடுத்துள்ளனர்.
இவர்கள் கையெழுத்திட்டுள்ள இந்த மனுவை அதிமுக எம்பிக்கள் மைத்ரேயன், தம்பிதுரை ஆகியோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து வழங்கினர்.
அந்த மனுவில், பிகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தாய்மொழியில் வழக்காட அனுமதி உள்ளது. ஆனால் தமிழில் மட்டும் தாய்மொழியில் வழக்காட அனுமதி இல்லை.
கோவையில் நீங்கள் துவக்கி வைக்கவுள்ள செம்மொழி மாநாடு ஆரம்பமாவதற்குள் தமிழில் வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந் நிலையில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி வட சென்னை- தென் சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
இதில் பேசிய அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி உண்ணாவிரதம் இருந்த வக்கீல்களை திமுக அரசு கைது செய்துள்ளது. வக்கீல்களுக்கு பிரச்சனை வரும் போதெல்லாம் குரல் கொடுப்பவர் புரட்சித் தலைவி மட்டுமே என்றார்.
சேகர்பாபு எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழை வழக்காடு மொழியாக்க எம்.ஜி.ஆர். போராடினார். ஆனால், தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கு கருணாநிதி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தமிழை வழக்காடு மொழியாக்க முடியும். எனவே அதற்காக நாம் பாடுபட வேண்டும் என்றார்.
சேலத்தில் ஜனாபதி, மொய்லி உருவ பொம்மை எரிப்பு:
இதற்கிடையே சேலத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோரின் உருவப் பொம்மையை எரித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாகவும், அலுவல் மொழியாகவும் அறிவிக்கக் கோரி சேலத்தல், தமிழ் மக்கள் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த 7 பேர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்த உருவப் பொம்மைகளை எரித்தனர்.
இதையடுத்து அந்த இயக்கத்தின் மாநிலத் தலைவர் பூ மொழி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.