திருச்சியில் வெடிபொருட்களுடன் 3 விடுதலைப் புலிகள் கைது
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவில் தமிழக தலைவராக செயல்பட்டவர் சிரஞ்சீவி என்ற ராஜூ என்ற சிரஞ்சீவி மாஸ்டர் (38).
வெடிகுண்டு தயாரிக்க தேவைபடும் அமோனியம் நைட்ரேட் ரசாயனத்தை ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய வழக்கில் கடந்த 2007ம் ஆண்டு இவரை போலீசார் தேடினர். ஆனால், இவர் இலங்கைக்கு தப்பிவிட்டார்.
2008ம் ஆண்டு மீண்டும் சென்னை வந்து கண்ணி வெடி தயாரிப்புக்கு தேவைபடும் உலோக உருளைகளை கடத்தியதாக இவர் மீது இன்னொரு வழக்கும் பதிவானது.
தமிழகத்தில் இருந்து உளவுத் தகவல்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அனுப்பி வந்தாக இவரை க்யூ பிராஞ்ச் போலீசார் தேடி வந்தனர். ஆனால், இவர் அவ்வப்போது படகுகள் மூலம் இலங்கைக்கு தப்பிவிட்டதால் சிக்கவில்லை.
இந் நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் மீண்டும் ரகசியமாக தமிழகம் வந்த இவர் காஞ்சீபுரத்தில் மறைந்திருந்தார்.
வழக்கமாக படகு மூலம் இலங்கை, தமிழகம் இடையே பயணிக்கும் இவர் இம்முறை கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னை வந்து பின்னர் காஞ்சீபுரம் சென்றார். இதனால் அவர் அப்போதே க்யூ பிரிவு போலீசாரிடம் சிக்கிவிட்டார்.
அவரை ரகசியமாக கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர்.
இந் நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சியிலும் சில விடுதலைப் புலிகள் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சியில் க்யூ பிரிவு போலீசார் நேற்று 3 பேரை கைது செய்தனர்.
இது குறித்து சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. லத்திகாசரண் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிரஞ்சீவி மாஸ்டர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்த சிவா என்பவர் சென்னைக்கு அகதியாக வந்து தங்கியுள்ளார். இவர் தனது வருகை பற்றி போலீசில் பதிவு செய்யவில்லை. ஈரோட்டில் தங்கியிருந்த விடுதலைப் புலி இயக்கத்தை சேர்ந்த செல்வம் மற்றும் திருச்சியில் வசித்த விடுதலைப் புலி தமிழ் ஆகியோருடன் சேர்ந்து, இலங்கையில் போர் நடந்தபோது, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக சிவா வெடி பொருட்கள் கடத்தியுள்ளார்.
போரில் விடுதலைப் புலிகள் தோல்வியடைந்த பிறகு, இலங்கை ராணுவத்திற்கு எதிராக போரிடுவதற்காக வெடி பொருட்களை கடத்திச் செல்லவும் இவர்கள் தற்போது திட்டமிட்டுள்ளனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்தவுடன் க்யூ பிரிவு போலீசார் திருச்சியில் சோதனை நடத்தி சிவா, தமிழ், செல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் செய்ய பயன்படும் 4,900 சாதாரண டெட்டனேட்டர்கள் மற்றும் 430 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்தியாவில் நாச வேலைகள் எதுவும் செய்ய திட்டமிடவில்லை என்பதும், இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காகவே வெடி பொருட்களை சிறிது, சிறிதாக வாங்கி பதுக்கி வைத்ததாகவும் தெரிய வந்துள்ளது.
தமிழக கடலோர பாதுகாப்பு தீவிரமாக இருந்ததால், இந்தப் பொருட்களை இலங்கைக்கு கடத்த முடியவில்லை என்றும் இதனால் திருச்சியிலேயே பதுக்கி வைத்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ரயில் தண்டவாள தகர்ப்பு சம்பவத்திற்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் கண்டறியப்பட்டுள்ளது. கைதான 3 பேரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று லத்திகாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.