ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை
நெல்லை: இரட்டைக் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
புளியங்குடி கீழபுதூர் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூர் பாண்டியன் என்பவரின் மகன்கள் சிவகுமார், மனோகர். இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தங்கள் தந்தை இறந்ததை அடுத்து தாத்தா பக்கிரிசாமி ஆதரவில் இருந்தனர்.
கீழபுதூர் சர்க்கரை கிணறு பகுதியில் பக்கிரிசாமிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் அருகே கிழபுதூர் வடக்கு தெருவை சேர்ந்த முருகராஜூக்கும் நிலம் உள்ளது.
இரு குடும்பத்தினருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி பக்கிரிசாமி, சிவக்குமார், மனோகர் ஆகியோர் கீழப்புதூரில் நடந்து வந்தபோது முருகராஜ், அவரது மனைவி தாயம்மாள் நாச்சியார், மகன் சரவணன் ஆகியோர் வழிமறித்து அவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.
தகராறு முற்றிய நிலையில் முருகராஜ் குடும்பத்தினர் மூன்று பேரும் சிவக்குமாரையும், மனோகரனையும் அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர். திருமணமான ஒரு வாரத்தில் மனோகரன் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசில் பக்கிரிசாமி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன், முருகராஜ், தாயம்மாள் நாச்சியார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பொன் பிரகாஷ், சரவணன் உள்ளிட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.