செம்மொழி மாநாட்டையொட்டி ரயில்களில் கூடுதலாக 7 பெட்டிகள்
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி விடப்பட்டுள்ள சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு இன்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து அறிஞர்கள், கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டையொட்டி சிறப்பு பேருந்துகள், ரயில்கள் விடப்பட்டுள்ளன.
கடந்த 21,22 ஆகிய இரு நாட்களும் சென்னையில் இருந்தும், கன்னியாகுமரியில் இருந்தும் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டன.
சிறப்பு ரயில்கள் தவிர வழக்கமாக கோவை செல்லும் அனைத்து ரயில்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
கூட்ட நெரிசலை சமாளிக்கவும், மக்கள் வசதிக்காகவும் குறிப்பிட்ட ரயிலகளில் 7 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டன. இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், மங்களூர் எக்ஸ்பிரஸ், வெஸ்ட் கோஸ்ட் மற்றும் சிறப்பு ரயில்களிலும் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டும் பொதுமக்கள் இடம் கிடைக்காமல் தத்தளித்தனர்.
இதே போன்று கோவையில் இருந்து வரும் ரயில்களும் நிரம்பி வழிவதால் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.