ஈழப் போரின்போது நடந்த தமிழினப் படுகொலைகள்-போர்க் குற்ற விசாரணைக்கு ஐ.நா. உத்தரவு
போர்க் குற்ற விசாரணைக்கான குழுவை அமைத்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவில் மொத்தம் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் - முன்னாள் இந்தோனேசிய அரசு வழக்கறிஞர் மர்சுகி தருஸ்மேன், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர்.
கடந்த வாரம் ஐ.நா. அரசியல் விவகாரப் பிரிவு இணைச் செயலாளர் லின் பாஸ்கோ இலங்கைக்குச் சென்றார். அப்போது அதிபர் ராஜபக்சேவை சந்தித்தார். பின்னர் போர்நடந்த பகுதிகளையும் பார்வையிட்டு விட்டுத் திரும்பினர். இந்தநிலையில் போர்க்குற்ற விசாரணைக் குழுவை ஐ.நா. அமைத்துள்ளது.
ஈழத்தில் போர் உச்சத்தில்இருந்த காலகட்டத்தில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது இலங்கை. இதுகுறித்து அப்போதே உலக நாடுகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஐ.நா. தலையிட வேண்டும் என வலியுறுத்தி குரல் கொடுத்தனர். ஆனால் அதை ஐ.நா. பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை.
போர் முடிந்த பிறகும் கூட ஐ.நா. ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை. போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட அதை யாரும் கண்டுகொள்ளாமலேயே இருந்தனர்.
மேலும், ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தபோதிலும் அதை ஐ.நா. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் சமீபகாலமாக ஈழப் போரின் போது நடந்த ராணுவ அத்துமீறல்கள், படுகொலைகள் தொடர்பான வீடியோ படங்கள், புகைப்படங்கள் வெளியாக ஆரம்பித்த நிலையில் இலங்கை மீதான ஐ.நா.வின் நிலைக்கு ஆட்சேனையும், எதிர்ப்பும் வலுத்து வந்தது.
இந்த நிலையில்தான் போர்க்குற்ற விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணைக் குழு குறித்து இலங்கை சென்றிருந்த பாஸ்கோ கூறுகையில், ஈழப் போரின்போது நடந்த அத்துமீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். இறுதிக்கட்டத்தின்போது நடந்த ராணுவ அத்துமீறல்கள் குறித்து முக்கியமாக விசாரிக்கப்படும் என்றார்.
ஐ.நா. கணக்குப்படி கடைசி கட்டத்தில் 7500 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் இது 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டதாக இருக்கும் என பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இலங்கை அதிர்ச்சி - கோபம்
ஐ.நா.வின் விசாரணைக் குழுவுக்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு மீடியா அமைச்சர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், இது தேவையில்லாதது, ஏற்றுக் கொள்ளமுடியாதது. இலங்கை போன்ற சுதந்திரமான, இறையாண்மை மிக்க நாடு இதை ஏற்றுக் கொள்ளாது என்றார்.
உலக நாடுகளிலிருந்து அதிகரித்து வந்த நெருக்கடியைத் தொடர்ந்து கடந்த மாதம் ஒரு கண் துடைப்பு விசாரணைக் கமிஷனை இலங்கை அறிவித்தது என்பது நினைவிருக்கலாம்.
தற்போது ஐ.நா. அமைத்துள்ள விசாரணைக் குழு சுதந்திரமான முறையிலும், நியாயமான முறையிலும் விசாரணை நடத்தினால், விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டால் புதைந்து போன பல உண்மைகள் வெளியாகும் வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.