பாஜகவில் மீண்டும் இணைந்தார் ஜஸ்வந்த் சிங்!
டெல்லி: பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங் 9 மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் கட்சியில் இணைந்தார்.
முகமது அலி ஜின்னா குறித்து அவர் எழுதிய புத்தகத்தையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அத்வானியில் ஆரம்பித்து கட்சியின் தலைவர்கள் பலரையும் கடுமையாக விமர்சித்து வந்தார் ஜஸ்வந்த் சிங்.
இந் நிலையில் அவரை மீ்ண்டும் கட்சியில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து இன்று அவர் மூத்த தலைவரான அத்வானி, கட்சியி்ன் தலைவர் நிதின் கட்காரி ஆகியோர் முன்னிலையில் கட்சியில் சேர்ந்தார்.
அப்போது நிருபர்களிடம் பேசிய ஜஸ்வந்த், தெரிந்த முகங்கள், 40 ஆண்டுகள் பழகிய இடத்துக்கு மீண்டும் வந்துவிட்டது மகிழ்ச்சி தருகிறது. நீக்கப்பட்டபோது ஏற்பட்ட வேதனையை நான் மீண்டும் கட்சியில் சேர தலைவர்கள் எடுத்த முயற்சிகள் மறக்கச் செய்துவிட்டன என்றார்.
இவருக்கு முன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உமா பாரதி மீண்டும் கட்சியில் சேர ஆர்எஸ்எஸ்சில் ஒரு பிரிவு எதிர்ப்பு தெரிவத்து வருகிறது. இதனால் அவரை மீண்டும் கட்சியில் சேர்க்கும் திட்டம் இதுவரை பலனளிக்கவில்லை.
கட்சியில் சேர்ப்பார்கள் என்று நம்பி தான் ஆரம்பித்த போட்டி கட்சியிலிருந்தே உமா பாரதி பல மாதங்களுக்கு முன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.