வழக்கு பதிவில் தவறு: களக்காடு பெண் எஸ்.ஐ. சஸ்பெண்ட்
நெல்லை: வழக்குப் பதிவில் கவனக்குறைவாக இருந்து தவறிழைத்த பெண் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமாரி. இவர் களக்காடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அங்கு கடந்த மாதம் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வழக்கு விசாரணையை இவர் சரியாக நடத்தவில்லை.
இதே போன்று இவர் பல வழக்கு விசாரணைகளை சரியாக நடத்தாமல் கவனக்குறைவாக இருப்பதாக எஸ்.பி. ஆஸ்ரா கர்கிற்கு புகார்கள் வந்தன.
இது குறித்து விசாரணை நடத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு ஆஸ்ரா உத்தரவிட்டார். விசாரணையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி பணியில் கவனக்குறைவாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவர் கடந்த 2009-ம் ஆண்டு திசையன்விளையில் பணியாற்றியபோது மர்மமான முறையில் இறந்த மீரா சகிலா பானு வழக்கினை தற்கொலை வழக்காக பதிவு செய்தார். ஆனால் அவ்வழக்கினை வேறு போலீஸ் அதிகாரி விசாரித்தபோது கொலை வழக்காக மாற்றப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.