வறுமை-தந்தை, தாய், 2 மகள்கள் தீக்குளித்து தற்கொலை: பெற்றோர், 2 குழந்தைகள் தூக்கிட்டு தற்கொலை
சென்னை& பண்ருட்டி: பண்ருட்டி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். அதே போல சென்னையில் 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்ற கணவனும், மனைவியும், தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டரான ராஜாங்கத்தின் (49) மனைவி மல்லிகா, மகள்கள் திவ்யா (12), தீபிகா (9).
ராஜாங்கத்திற்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் அவரால் சரியாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் குடும்பம் வறுமை வாடி வந்தது.
இதனால் விரக்தியடைந்த ராஜாங்கம் தனது மனைவி மற்றும் மகள்களுடன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தனர்.
2 குழந்தைகளை தூக்கிலிட்டு தம்பதி தற்கொலை:
இந் நிலையில் 2 குழந்தைகளை தூக்கிலிட்டுக் கொன்ற கணவனும், மனைவியும், தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னை ஜாபர்கான்பேட்டை காமராஜர் காலனியில் அப்பாதுரை தெருவில் வசித்து வந்தவர் அன்வர் (32). ஆட்டோ டிரைவராக இருந்து வந்தார். தி.நகர் பகுதியில் ஆட்டோ சங்க துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இவருக்கு பரீதா (23) என்ற மனைவியும், ரைனா (4), ரிஸ்வானா (2) ஆகிய 2 குழந்தைகளும் இருந்தனர்.
வீட்டில் வறுமை தாண்டவமாடியதால் பெருமளவில் பணம் கடனாக வாங்கியிருந்தார். கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் பணத்தை கந்து வட்டிக்கு வாங்கியிருந்தார் அன்வர். இதற்காக தினசரி ரூ.300 வட்டியாக செலுத்த வேண்டுமாம்.
ஆனால் சமீப காலமாக அவரால் வட்டிப் பணத்தைக் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர்.
இந் நிலையில் முதலில் தனது குழந்தைகள் ரைனாவையும், ரிஸ்வனாவையும் கயிற்றை கட்டி தூக்கில் தொங்கவிட்டார் அன்வர். பின்னர் அன்வரும், பரிதாவும் தூக்குப் போட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை நான்கு பேரும் பிணமாக தூக்கில் தொங்கியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கதறினர். போலீஸார் நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அன்வருக்கு கந்து வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் மிரட்டலே இந்த மரணத்திற்குக் காரணமாக கருதப்படுவதால், அன்வரை யார் யார் மிரட்டினார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.