For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக இலக்கிய அணித் தலைவர் பழ. கருப்பையா வீட்டில் வெறித் தாக்குதல்-சோ கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்திருந்த அதிமுக இலக்கிய அணி தலைவர் பழ. கருப்பையாவின் வீட்டில் புகுந்து மர்ம கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் வீட்டில் பெருத்த சேதம் ஏற்பட்டது.

பழ. கருப்பையா, சென்னை ராயப்பேட்டை போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள பெசன்ட் தெருவில் வசித்து வருகிறார். இவர் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை இவரது வீட்டுக்குள் ஒரு கும்பல் புகுந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கியது. பழ. கருப்பையாவும் அக்கும்பலால் தாக்கப்பட்டார்.

வீட்டின் முன்பக்க அறையில் போடப்பட்டிருந்த மேசை, நாற்காலி,டீப்பாய் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிய அக்கும்பல், வீட்டின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த காரையும் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பி ஓடியது.

தகவல் கிடைத்தவுடன் ராயப்பேட்டை உதவி கமிஷனர் வசந்தகுமாரி, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுகுறித்து ராயப்பேட்டை போலீஸில் கருப்பையா புகார் கொடுத்தார்.

இந்த தாக்குதல் குறித்து கருப்பையா கூறுகையில்,

பிற்பகல் 2.30 மணி அளவில் நான் சாப்பிட்டு விட்டு வீட்டில் ஓய்வில் இருந்தேன். அப்போது தமிழ்வாணன் என்பவர் போனில் பேசினார். ஒரு விழா சம்பந்தமான அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். நீங்கள் வீட்டில் இருந்தால் உங்களை பார்க்க வருகிறேன் என்று அவர் கூறினார். அவர் யார்? என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் தெரிந்த நபர் போல பேசியதால் வீட்டில் இருக்கிறேன் வாருங்கள் என்று தெரிவித்தேன்.

அதன் பிறகு சற்று நேரத்தில் தாக்குதல் சம்பவம் நடந்து விட்டது. வந்தவர்கள் எனது வாயிலும், முகத்திலும் குத்தினார்கள். முதுகிலும் கையால் அடித்தார்கள். பின்னர் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். இதற்குள் சத்தம் கேட்டு வெளியில் இருந்து பொது மக்கள் எனது வீட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க முற்பட்டனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் ஏறி தப்பி ஓடி விட்டனர்.

இந்த சம்பவம் பற்றி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு, எனக்கு தைரியம் கொடுத்து பேசினார். அவர் பேசியது எனக்கு யானை பலம் வந்தது போல இருந்தது என்றார்.

கருப்பையா வீடு தாக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் பெரும் திரளான அதிமுகவினர் திரண்டு விட்டனர். துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியும் வந்து சேர்ந்தார்.

அதிமுக நிர்வாகிகளும் திரண்டு வந்து கருப்பையாவிடம் நடந்தது குறித்து கேட்டறிந்தனர்.

இச்சம்பவத்திற்கு திமுகவினரே காரணம் என அதிமுகவினர் கூறியுள்ளனர். சோ ராமசாமி கருத்து தெரிவிக்கையில், கோவையில் நாகரீகம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கு இப்படி செய்திருக்கிறார்கள். கருப்பையா கேட்ட கேள்விளுக்கு திமுகவினரிடம் பதில் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த பதில் இதுதான் போலும்.

திமுகவை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால் இப்படித்தான் தாக்குதல் நடத்துவார்கள். இது ஒன்றும் புதிதல்ல, 1971ல் இருந்தே அவர்கள் இப்படித்தான் செய்கிறார்கள் என்றார்.

ஜெயலலிதா கண்டனம்

கருப்பையா வீடு தாக்கப்பட்டதை ஜெயலலிதா கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஓர் அரசின் குறைபாடுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கும், அந்த குறைபாடுகளை மக்கள் தெரிந்துகொள்வதற்கும் இந்திய அரசு அமைப்பு சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், உண்மை நிலையை பழ.கருப்பையா எடுத்துரைத்திருக்கிறார்.

இவ்வாறு பேசிய அவரை தாக்கியது எந்த வகையில் நியாயம்?. அவர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீஸ் துறையினர் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X