மீண்டும் பரவும் ஸ்வைன் ப்ளூ: தமிழகத்தில் 21 பேர் பாதிப்பு-நாகூரில் முதியவர் பலி!

நாகூரைச் சேர்ந்த ஒருவர் இந்த நோய் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. ஆந்திரா, கேரளா, தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருகிறது.
நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில், ஹைதராபாத்தில் ஒரு பெண் பலியாகியுள்ளார்.
தமிழகத்தில் நாகூரைச் சேர்ந்த ஒருவர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மாதத் தொடக்கத்தில் மும்பையில் பன்றிக்காய்ச்சல் தாக்கியது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது கேரளா, ஆந்திரா, தமிழகத்தில் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது.
கடந்த ஆண்டு மகாராஷ்டிராவை குறிப்பாக புனே நகரை பன்றிக்காய்ச்சல் மிகக் கோரமாக தாக்கியது. ஆனால் இந்த முறை கேரளாவில் பன்றிக் காய்ச்சல் தாக்கம் அதிகமாக உள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 345 பேரை பன்றி காய்ச்சல் தாக்கி இருக்கிறது. இதில் கேரளாவில் மட்டும் 266 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் 36 பேருக்கும், கர்நாடகாவில் 18 பேருக்கும், ஆந்திராவில் 8 பேருக்கும், உத்தரபிரதேசத்தில் ஒருவருக்கும் நோய் பரவியது.
ஒரு வாரத்தில் 17 பேர் உயிரிழந்து உள்ளனர். அதில் கேரளாவில் மட்டும் 7 பேர் இறந்து உள்ளனர். அதே போல மகாராஷ்டிராவில் 7 பேரும், ஆந்திராவில் 2 பேரும், உத்தரப்பிரதேசத்தில் ஒருவரும் பலியாகி இருக்கின்றனர்.
நாகூர் முதியவர் பலி:
இந் நிலையில், நாகை மாவட்டம் நாகூரைச் சேர்ந்த சம்ஷுல் என்ற 55 வயது முதியவர் பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இருதய கோளாறு, மூச்சுத்திணறல் காரணமாக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருக்கிறதா என்பதற்காக அவரது உள் தொண்டைப் பகுதியில் இருந்து சளியை எடுத்து அந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் பரிசோதனைக்காக அனுப்பியது. அந்த பரிசோதனை முடிவு வருவதற்குள் நோயாளி கடந்த வாரம் இறந்தார்.
பரிசோதனை முடிவுகள் வந்த போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கியிருந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த தஞ்சை மாவட்ட கலெக்டர் எம்.எஸ். சண்முகம், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் மதிவாணனுக்கு உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் இன்று விசாரணை நடத்தப்படும் எனவும், நோயாளியை அணுகி சிகிச்சை அளித்தவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படும் எனவும், நோயாளியின் சொந்த ஊரான நாகூரில் அவர் வசித்த பகுதியில் நோய் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் துணை இயக்குநர் மதிவாணன் தெரிவித்தார்.
குமரி, சென்னையில் வேகமாகப் பரவுகிறது:
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 பேருக்கும், சென்னையில், 3 பேருக்கும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் மகன், ஆவடியைச் சேர்ந்த ஒரு முதியவர், மேலும் ஒரு முதியவர் என மூன்று பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இவர்களுடைய சளி சாம்பிள் கிங் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டு அங்கு வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் சுப்புராஜ் கூறுகையில், தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
கேரளாவிலும், ஆந்திராவிலும் பன்றிக் காய்ச்சல் தாக்குதல் அதிகம் இருப்பதால் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இதன் தாக்கம் இருக்கக் கூடிய சாத்தியம் அதிகம் உள்ளது.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில், அந்தமாவட்டத்தில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னையிலும் 3 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு அரசுமருத்துவமனையிலும் தனி வார்டு அமைத்து பாதிப்புக்குள்ளானோரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை.
நோய்த் தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் மருந்துகள் கொடுத்து குணப்படுத்தி விட முடியும். கடைசி கட்டத்தில் வந்தால்தான் சிரமம். அப்படிப்பட்ட நிலையில் வருபவர்களை காப்பாற்ற முடியாது.
கடந்த ஆண்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணம் கடைசி கட்டத்தில் சிகிச்சைக்காக வந்ததுதான்.
இந்த நோய்ப் பரவல் குறித்து விவாதித்து ஆலோசிக்க சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இக்கூட்டம் முடிந்ததும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒருசிறப்புக் குழு செல்லவுள்ளது. போதிய அளவில் மருந்துகள் இருப்பதால் நோய்ப் பரவலைத் தடுக்க சிறப்பான நடவடிக்கைகளை அரசு செய்துள்ளது என்றார்.
பள்ளிகளுக்கு சர்க்குலர்:
இதையடுத்து சென்னை மாநகராட்சி நிர்வாகம், அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சர்க்குலர் அனுப்பியுள்ளது. அதில், விடுமுறையில் பள்ளி மாணவர்கள் யாராவது கேரளாவிற்கு சுற்றுலா சென்றிருந்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
மேலும், பள்ளி மாணவர்களுக்கு 100 டிகிரிக்கு அதிகமான காய்ச்சல், இருமல், சளி ஒழுகுதல், கண் எரிச்சல் போன்றவை இருந்தாலும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications