காஷ்மீரில் பெரும் கலவரம்-ஊரடங்கு அமல்-செல்போன் சேவை துண்டிப்பு
ஜூன் 25ம் தேதி சோபூரில் நடந்த என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்னர். இதையடுத்து ஹுரியத் மாநாடு கட்சி வன்முறையில் குதித்துள்ளது. நேற்று அந்த அமைப்பினர் போலீஸ் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். இதை போலீஸார் தடுக்கவே ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையைத் தடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.
இதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளத்தாக்கு முழுவதும் 144 போலீஸ் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், பாரமுல்லா பகுதிகளிலும் போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் செய்வோரை ஒடுக்க போலீஸார் கூடுதலா குவிக்கப்பட்டு வருகின்றனர். துணை ராணுவப் படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் நிலைமை மோசமாகி வருவதால் ராணுவத்தின் உதவியை மாநில அரசு கோரியுள்ளது. இதையடுத்து எந்த நேரத்திலும் அங்கு ராணுவம் விரையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, வதந்திகள் பரப்புவோரை ஒடுக்க செல்போன் சேவை மற்றும் எஸ்.எம்.எஸ். சேவை ஆகியவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
11ம் தேதி ப.சிதம்பரம் காஷ்மீர் பயணம்:
இந் நிலையில் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் 11ம் தேதி ஸ்ரீநகர் செல்கிறார்.
மாநில அரசு, ராணுவம், துணை ராணுவம், உளவுத்துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.