பெட்ரோல் விலை உயர்வு அவசியம்: மக்களுக்கு ஒரேயடியாக சலுகை தர முடியாது-பிரதமர்
ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங் நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பெட்ரோல் விலை உயர்வு குறித்த எதிர்க்கட்சிகளின் கண்டனம் குறித்துக் கூறுகையில், மக்களுக்கு அதீத சலுகைகளை அளிப்பது இயலாத காரியம். தற்போதைய பெட்ரோல்,டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாது. இது இன்னும் கூட உயரும் வாய்ப்புள்ளது. எனவே தற்போதைய உயர்வை திரும்பப் பெறுவது இயலாத காரியம்.
நாம் சீர்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டத்தில் உள்ளோம். இதனால்தான் பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயம் மீதான அரசின் கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளோம்.
மண்ணெண்ணை மற்றும் காஸ் சிலிண்டர் விலைகளும் கூட உயர்த்தப்பட்டுள்ளன. இதுவும் அவசியமாகும். மிகப் பெரிய அளவில் நாம் கொடுத்து வரும் மானியவிலையால் பல கடும் விளைவுகளை சந்தித்து வருகின்றோம்.
இந்த விலை உயர்வால் நிச்சயம் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். இருப்பினும் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் பெருமளவில் பாதிக்கப்படாமல் அரசு பார்த்துக் கொள்ளும். இதன் காரணமாகவே காஸ் சிலிண்டர் மற்றும் மண்ணெண்ணை விலை உயர்வை மட்டும் அளித்துள்ள அரசு அவற்றின் விலை நிர்ணயத்தை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க முடிவு செய்தது.
விலை உயர்வு தொடர்பாக எங்கிருந்தும் அரசுக்கு நெருக்கடி வரவில்லை. நமது நாட்டுக்கு எது சரியோ அதைத்தான்அரசு செய்யும். பிற நாடுகளின் நிர்ப்பந்தத்திற்கு அரசு அடிபணியாது என்றார்.
அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்று கேட்டதற்கு, அது பற்றி பத்திரிகையாளர்களிடம் சொல்ல முடியாது. மாற்றம் இருந்தால் உங்களுக்கு தெரிவிப்போம் என்றார்.