பெட்ரோல் விலை உயர்வு: ஜூலை 5ல் அதிமுக கூட்டணி பந்த்-ஆட்டோக்கள் ஓடாது
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் உள்பட 7 கட்சிகள் பங்கேற்கும் எனவும் அதிமுக அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஜூலை மாதத்தில் பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தவிருப்பதாக இடதுசாரிக்கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் அதிமுக சார்பில் தமிழகம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில்,
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். எனவே இந்த விலை உயர்வை உனடியாக மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும்.
அதை வலியுறுத்தி நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.
ஆட்டோக்களும் ஓடாது:
இதற்கிடையே வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறுகையில், வருகிற ஜூலை 3ம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அதைத் தொடர்ந்து ஜூலை 5ம் தேதி எதிர்க்கட்சிகள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் பங்கேற்போம்.
அன்றைய தினம், அனைத்து வகை ஆட்டோக்களும் ஓடாது. லோடு ஆட்டோக்களும் ஓடாது என்றார்.
பாஜக போராட்டம்-இடதுசாரிகள் பந்த்:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சார்பில் வரும் 1,2ம் தேதிகளில் மாநிலத் தலைநகரங்களில், முக்கிய நகரங்களில் எதிர்ப்பு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நடக்கும் பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்கிறார்.
அதே போல சமாஜ்வாடி- இடதுசாரி கட்சிகள் ஆகியவை ஒருங்கிணைந்து வரும் 5ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
அதே தினத்தில் தான் அதிமுக கூட்டணியும் பந்த் நடத்துவது குறிப்பிடத்தக்கது.