மேலவளவு படுகொலைகள் நினைவு தினம்-போலீஸ் குவிப்பு
மதுரை: மதுரை அருகே மேலவளவு தலித் பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 5 தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமப் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முருகேசன். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த முருகேசன் தலைவரானதை அப் பகுதியைச் சேர்ந்த ஆதிக்க ஜாதியினர் எதிர்த்து வந்தனர்.
இந் நிலையில் முருகேசனும் அவரது சமூகத்தைச் சேர்ந்த 5 பேரும் கடந்த 1997ம் ஆண்டு பஸ்சில் வைத்து மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலைகள் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது முதலில் மதுரை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால், சாட்சிகளுக்கு மிரட்டல் வந்ததால் அந்த வழக்கு சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
அங்கு குற்றம் சாட்டப்பட்ட 40 பேரில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 23 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த 23 பேரின் விடுதலையை எதிர்த்து கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து அனைவரையும் மீண்டும் கைது செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 17 பேரும் அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
ஆனால், இவர்களது மனுக்களை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 17 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
மேலும், மற்ற 23 பேரின் விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது துரதிர்ஷ்டவசமானது என்றும், அதனால் இவர்களின் விடுதலை உறுதி செய்யப்படுவதாகவும் நீதிமன்றம் தமிழக அரசுக்கு 'சூடு' போட்டது.
இந்த பயங்கர கொலைகள் நடந்ததன் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து மதுரை மேலூர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலவளவில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உட்பட பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதையடுத்து அங்கு நான்கு டி.எஸ்.பிக்கள், 10 இன்ஸ்பெக்டர்கள், 61 எஸ்.ஐகள் தலைமையில் சுமார் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலவளவுக்கு வெளியே பல இடங்களில் போலீஸ் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.
மீண்டும் முருங்கை மரத்தில் வேதாளம்-திருமா:
இதற்கிடையே பெட்ரோல், டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலையேற்றத்துக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதைப் போல இந்திய அரசு மீண்டும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை திடீரென உயர்த்தியுள்ளது.
அத்துடன் ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய இன்றியமையாத பொருள்களான மண்ணெண்ணெய் விலையையும், எரிவாயு விலையையும் உயர்த்தியுள்ளது.
இதனால் வழக்கம்போல் உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த அடித்தட்டு மக்களே வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என இந்திய அரசு அவ்வப்போது விளக்கம் தருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
அடித்தட்டு மக்களின் பொருளாதார வலிமையை கருத்தில் கொண்டு, குறிப்பாக, அவர்களின் வாங்கும் சக்தியை கணக்கில் கொண்டு, அதன் அடிப்படையில் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் மக்களுக்கான ஓர் அரசின் கடமையாக இருக்க வேண்டும்.
மாறாக, ஏழை எளிய மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் வகையில் இவ்வாறு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலையை தாறுமாறாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.