சட்டீஸ்கர்-நக்ஸல் தாக்குதலில் 26 மத்திய ரிசர்வ் போலீசார் சுட்டுக் கொலை
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 26 மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாயினர்.
நேற்று மாலை நக்ஸல்கள் ஆதிக்கம் மிகுந்த நாராயண்பூர் மாவட்டத்தில் மலைபபாங்கான பஸ்தர் வனப் பகுதியில் தவுரை ரோடு என்ற இடத்தில் சாலைகளில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனையில் 70 மத்திய ரிசர்வ் போலீசார் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்கள் சோதனையை முடித்துவிட்டு 3 கி.மீ. தொலைவில் உள்ள தங்களது முகாமுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, மலை உச்சியில் பதுங்கியிருந்த சுமார் 200 நக்ஸல்கள் தானியங்கி துப்பாக்கிகளுடன் மத்தியப் படையினர் மீது சரமாரியாக சுட்டனர்.
படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே 2 மணி நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. தகவல் அறிந்து, வேறு பகுதிகளில் இருந்து போலீசாரும் மத்தியப் படையினரும் வரவழைக்கப்பட்டனர்.
மலை உச்சியில் இருந்தபடி சுட்டதால் நக்ஸல்கள் கை ஓங்கியது. இந்த மோதலில் 26 ரிசர்வ் படை போலீசார் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இதையடுத்து நக்ஸல்கள் காட்டுக்குள் ஓடி மறைந்துவிட்டனர்.
மேலும் சட்டீஸ்கர் போலீஸ் படையின் 4 போலீஸ் அதிகாரிகள், 3 ரிசர்வ் படை போலீசார் படுகாயமடைந்தனர்.
அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் ஜக்தல்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒரு போலீஸ் அதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவத்தையடுத்து அந்தப் பகுதிக்கு மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்ன. பலியான படையினரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்த மாநிலத்தில் சமீப காலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள 3வது பெரிய தாக்குதல் இதுவாகும்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி, தண்டேவாடா கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 75 மத்திய ரிசர்வ் படை போலீசாரும், ஒரு மாநில போலீஸ்காரரும் பலியாயினர்.
மே 8ம் தேதி, நாராயண்பூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் பஸ் வெடித்துச் சிதறி 8 ரிசர்வ் படை போலீசார் பலியாயினர்.
இந் நிலையில் நேற்று 26 ரிசர்வ் போலீசார் பலியாகியுள்ளனர்.
இன்றும் நாளையும் நக்ஸல் பந்த்:
இந் நிலையில் நேற்று தாக்குதல் நடந்த பகுதியில் நக்சலைட்களுக்கு எதிராக மத்தியப் படைகள் எடுத்து வரும் நடவடிக்கையைக் கண்டித்து இன்று முதல் 2 நாள் பந்த் நடத்த நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையொட்டி, இந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர்.
தண்டேவடா சம்பவத்துக்குப் பிறகு நக்சலைட்களை எதிர்த்து போரிட ராணுவத்தை நேரடியாக களத்தில் இறக்குவது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்தது. ஆனால், இன்னும் முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.