சுதர்சனத்தின் பூந்தமல்லி தொகுதி காலி-தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தகவல்
சென்னை: பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ சுதர்சனம் மரணமடைந்துள்ளதால் அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு தமிழக சட்டசபை செயலகம் தகவல் அனுப்பியுள்ளது. இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்துவதா என்பதுகுறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவெடுக்கும்.
கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குச் சென்றிருந்த சுதர்சனம் அங்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் பூந்தமல்லி தொகுதியலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
தற்போது பூந்தமல்லி தொகுதி காலியானது குறித்து சட்டசபை செயலகம், தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தகவல் கொடுத்துள்ளது. இதையடுத்து நேற்றிலிருந்து 6 மாதத்திற்குள் அங்கு தேர்தல் நடத்தி புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. ஆயுள்காலம் முடிய ஒரு ஆண்டுக்கும் குறைவான அவகாசமே உள்ளதால் இடைத் தேர்தல் வருமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
எனவே தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக என்ன முடிவெடுக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை தேர்தல் நடந்தால் நடப்பு திமுக ஆட்சியின் கீழ் நடைபெறும் 12வது இடைத் தேர்தலாக அது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சட்டசபையில் கட்சிகளின் நிலவரம்:
தி.மு.க. -99
அ.தி.மு.க. -57
காங்கிரஸ் -35
பாமக -18
சிபிஎம் -9
சிபிஐ -6
ம.தி.மு.க. -3
விடுதலை சிறுத்தைகள் -2
தே.மு.தி.க. -1
சுயேச்சை -1
எந்தக் கட்சியையும் சேராதவர் -1
நியமனம் -1
சபாநாயகர் -1
காலி இடம் -1