வேலூர்-அடிப்படை வசதி இல்லாத 70 பள்ளிகளுக்கு சீல் வைக்க உத்தரவு
வேலூர்: வேலூரில் அடிப்படை வசதிகள், அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் 70 பள்ளிகளை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உரிய அங்கீகாரம், அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளிகளை மூடி சீல் வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து கணக்கெடுத்த கல்வித்துறை அதிகாரிகள் 70 பள்ளிகள் இதுபோல செயல்பட்டு வருவதை அறிந்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். நேற்று வரை அவர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டது. அதற்குள் உரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்தப் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் நேற்றுடன் காலக் கெடு முடிவடைந்த நிலையில் இதுவரை எந்தப் பள்ளியும் இவற்றைச்செய்யவில்லை. இதையடுத்து இன்று அந்தப் பள்ளிகளை மூடி சீல் வைக்க கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் வேலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் படித்து வரும் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.