உத்தப்புரம் தலித் மக்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை
மதுரை: கைது செய்யப்பட்டுள்ள மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராம தலித் மக்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி காவல்துறையினர் உத்தப்புரம் கிராமத்திற்குச் சென்று தலித் மக்கள் தலைவர்களான சங்கரலிங்கம், பொன்னையா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர்கள் அங்கிருந்த தலித் மக்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கே. பாலபாரதி, என். நன்மாறன், எஸ்.கே. மகேந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் பி. சம்பத் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்து கோவையிலிருந்து திரும்பிய பிறகு இந்த பிரச்சனைக்கு முடிவு எடுப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி கூறினார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சங்கரலிங்கம், பொன்னையா ஆகியோரை நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
ஜூன் மாதம் 29-ம் தேதி அன்று சிறையில் இருந்து வெளியில் வந்தவர்களை பழைய வாரண்ட் இருப்பதாகச் கூறி காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.
நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக காவல்துறையினர் தலித் மக்களை கைது செய்தும், அவர்கள் மீது தடியடி நடத்தியும் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, கைது செய்யப்பட்டுள்ள உத்தப்புரம் தலித் மக்களை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications