என்எல்சி தொழிலாளர் ஸ்டிரைக்-நிலக்கரித்துறை அமைச்சருடன் ராஜா பேச்சு
நெய்வேலி/டெல்லி: நெய்வேலி அனல் மின் கழக தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஜெயப்பிரகாஷ் ஜெய்ஸ்வாலை, திமுகவைச் சேர்ந்த தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராஜா சந்தித்துப் பேசினார்.
1-1-2007 முதல் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நெய்வேலியில் பணிபுரியும் 14 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும் என கோரி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச மற்றும் பாட்டாளி தொழிற்சங்கங்கள் 65 முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இருப்பினும் கடைசி வரை உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுவதாக நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் அறிவித்தது.
இதையடுத்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்துக்கு தொமுச, பாட்டாளி தொழிற்சங்கம் ஆகிய இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் முடிவுக்கு, அங்கீகரிக்கப்படாத பிற தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதனால் மின் உற்பத்தி பாதித்து, தென் மாநிலங்களுக்கான மின் விநியோகம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்டிரைக்கை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சரை, அமைச்சர் ராஜா சந்தித்துப் பேசியுள்ளார்.
என்எல்சி தொழிலாளர்களில் பெரும்பாலானோர் திமுக தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.