கொடநாடு: புதிய கட்டிடமா?-பழைய கட்டடம் புதுப்பிப்பா?

கொடநாட்டில் தேயிலை எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவி்ன் பங்களா அருகே விதிகளை மீறி புதிய டீ தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிதாக கட்டவில்லை-ஜெயலலிதா:
ஆனால், கொடநாடு எஸ்டேட்டில் புதிதாக தேயிலை தொழிற்சாலை எதையும் கட்டவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், கொடநாட்டில் தேயிலை தொழிற்சாலை கட்டப்படுவதாகக் கூறி, விசாரணை அதிகாரியை முதல்வர் கருணாநிதி நியமித்துள்ளார். அந்த எஸ்டேட்டில் 142 ஆண்டு கால, மண் சுவரால் ஆன, பழைமையான தொழிற்சாலை சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்ற நல்லெண்ணத்தில், அந்தத் தொழிற்சாலையை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அதற்கு உரிய அதிகாரிகளிடம், முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது என ஜெயலலிதா கூறியுள்ளார்.
புதிய கட்டடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பம்:
ஜெயலலிதா இவ்வாறு கூறினாலும் கடந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், கொடநாடு ஊராட்சித் தலைவர் பொன்தோசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் கொடநாடு எஸ்டேட் பகுதியில் ஏற்கனவே உள்ள தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் புதிய கட்டடம் கட்ட அனுமதிக்குமாறு விண்ணப்பித்திருந்தார். அத்துடன் அந்தப் புதிய கட்டடத்துக்கான வரைபடத்தையும் இணைத்திருந்தார்.
ஆனால், அந்த விண்ணப்பத்தில் புதிய கட்டடம் குடியிருப்புப் பகுதியா அல்லது தொழிற்சாலையா என்பதை குறிப்பிடவில்லை. அதே நேரத்தில் அந்த வரைபடத்தில் தொழிற்சாலைக்கான வரைபடமே இணைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்ற கொடநாடு ஊராட்சித் தலைவர் பொன்தோஸ், கொடநாடு எஸ்டேட்டில் புதிய கட்டடம் கட்ட கடந்த ஜூலை 31ம் தேதி அனுமதி வழங்கினார்.
இதில் தலா 1,500 சதுர அடி பரப்பளவில் இரண்டு கட்டடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி தலா 1,500 சதுர அடி பரப்பளவில் மேலும் இரண்டு கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆய்வு நடத்த அனுமதி மறுப்பு:
இதற்கிடையே இந்த நான்கு அனுமதிகளையும் வைத்து 6,000 சதுர அடி பரப்பில் ஒரே கட்டடமாக கட்டப்படுவதாக வந்த தகவல்களையடுத்து பொன்தோஸ், கொடநாடு எஸ்டேட்டில் நேரடியாக ஆய்வு நடத்த அங்கு நுழையவே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
கடிதங்களை வாங்க மறுத்த எஸ்டேட்:
ஆனாலும் புதிதாக பெரிய அளவில் கட்டடம் கட்டப்படுவதை உறுதி செய்து கொண்ட அவர் இதுகுறித்து விளக்கம் கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் இரு கடிதங்களை அனுப்பினார்.
ஆனால், இந்த இரு கடிதங்களையும் கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் வாங்க மறுத்துவிட்டது. இதையடுத்து அவை திரும்பி வந்துவிட்டன.
அனுமதியை ரத்து செய்த ஊராட்சி:
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 22ம் தேதி கொடநாடு எஸ்டேட் நிர்வாகத்துக்கு கொடநாடு ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அதில், விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள அந்த கட்டடத்துக்கான அனுமதியை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார் பொன்தோஸ்.
தொழிற்சாலை கட்ட வேண்டுமெனில் அதற்கான அனுமதியை தொழில் வர்த்தகத் துறையிடமிருந்தே பெற வேண்டும், 500 சதுர மீட்டர் அளவிலான இந்த கட்டடத்துக்கு மாவட்ட வனத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் புவி தொழில்நுட்பத்துறை ஆகியவற்றிலிருந்து தடையில்லா சான்று பெற்ற பின்னரே கட்ட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்ட பொன்தோஸ், அதை கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் பெறாததால் கட்டடத்துக்கான அனுமதியை ரத்து செய்வதாக தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டடம் கட்டி முடிப்பு:
ஆனால், அதற்குள்ளாக கொடநாடு எஸ்டேட்டில் அந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டதாகவும், நீலகிரி மாவட்டத்திலேயே இதுதான் மிகப்பெரிய தேயிலை தொழிற்சாலையாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
இந் நிலையில் தான் இது குறித்து விசாரணைக்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
கொடநாடு எஸ்டேட் பகுதியில் ஏற்கெனவே இருக்கும் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டதா அல்லது ஜெயலலிதா சொல்வது போல பழைமையான சிதிலமடைந்த தொழிற்சாலை தான் புதுப்பிக்கப்படுகிறதா என்பது குறித்து அரசு நியமித்துள்ள அதிகாரி உதயசந்திரன் விசாரணை நடத்தவுள்ளார்.












Click it and Unblock the Notifications