அரசு ஊழியர்களின் வாரிசுகள் தமிழில் மட்டுமே படிக்க சட்டம் வேண்டும்: ராம. கோபாலன்
தஞ்சாவூர்: அரசு ஊழியர்களின் வாரிசுகள் தமிழில் மட்டுமே படிக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
ஆன்மிகவாதிகளாலேயே தமிழ் வளர்ந்தது. ஆனால், நடந்து முடிந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆன்மிகவாதிகள் ஒரு சிலர் மட்டுமே ஒப்புக்கு அழைக்கப்பட்டனர். சமயம், ஆன்மிகத்தைப் புறக்கணித்துவிட்டு நடத்தப்படும் எதுவும் செம்மொழி மாநாடாக இருக்க முடியாது.
எந்த மொழியும் தனித்து வளர முடியாது. மொழிப் பரிமாற்றம் இருந்தால்தான் மொழி வளரும்.
தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியலுக்கு குஜராத்தி, மராத்தி மொழிகளில் கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளதுபோல, தமிழிலும் உருவாக்கினால் தான் தமிழ் வளரும்.
தமிழகத்தில் ஒதுவார்களுக்கு குறைவான ஊதியம்தான் வழங்கப்படுகிறது. பள்ளிகளில் ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருவாசகம் போன்றவை கற்றுத் தரப்படுவதில்லை.
மதச்சார்பற்ற அரசுக்கு மதத்தில் ஈடுபட உரிமை இல்லை. மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களில் உரிமை கோராத அரசு, இந்துக் கோயில்களை உரிமை கொள்ளக் கூடாது.
வக்பு வாரிய சொத்துகள் மீட்டுத் தரப்படும் என்று துணை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதேபோல கோயில் நிலங்களையும் மீட்டுத் தர வேண்டும்.
தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. வேலூர், தர்மபுரி, ஆந்திர- கர்நாடக எல்லை, கொடைக்கானல் மலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட இடங்களில் நக்ஸல்களின் ஆயுதப் பயிற்சி நடைபெறுகிறது. இது உளவுத் துறையின் அலட்சியத்தையே காட்டுகிறது என்றார் ராம. கோபாலன்.