கொடிக் கம்பம் விவகாரம்-திமுக, அதிமுகவினர் மோதல்-அரிவாள் வெட்டு
கரூர்: கரூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கொடிகம்பம் அமைக்கும் விவகாரத்தில் திமுக - அதிமுக நிர்வாகிகள் மோதிக் கொண்டதில் பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் கரூர் நகராட்சி்க்கு உட்பட்ட மேட்டுத் தெருவில் அதிமுகவினர் கொடி கம்பம் வைத்து கொடியேற்ற முயற்சி செய்துள்ளனர்.
அப்போது திமுகவினர் அங்கு விரைந்து வந்தனர். அதிமுகவின் கொடி கம்பம், ஏற்கனவே அங்கு வைக்கப்பட்டுள்ள திமுக கொடி கம்பம் மற்றும் கல்வெட்டு அருகில் இருப்பதால் அதை மறைக்கும் என்பதால் வேறு இடத்தில் வைக்குமாறு கூறினர்.
ஆனால், இஙகுதான் கொடிக் கம்பத்தை வைப்போம் என அதிமுகவினர் பிடிவாதமாக கூறினர். மேலும், அதிமுக மாவ்டடச் செயலாளர் செந்தில் பாலாஜி தலைமையில் கொடிக் கம்பத்தை அங்கேயே வைக்கவும் முயற்சி செய்தனர்.
இதையடுத்து திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆண்டாள் பாலகுரு தலைமயில் வந்த திமுக நிர்வாகிகள் அதிமுக நிர்வாகிகளை ஓட ஓட விரட்டி அடித்தனர். இதனால் அதிமுக நிர்வாகிகள் அடி பொறுக்க முடியாமல் சாக்கடையில் விழுந்து தப்பித்தனர். இதில் பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. சிலருக்கு மண்டை உடைந்தது.
பதிலுக்கு அதிமுக நிர்வாகிகள் கும்பலாக வந்து திமுகவினரை தாக்கினார்கள். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்து அந்த இடமே கலவர காடாக காட்சியளித்தது.
தகவல் அறிந்த எஸ்பி தினகரன் அந்த இடத்தில் ஆயுதம் ஏந்திய போலீசாரை குவித்தார். மோதலில் ஈடுபடுவோர் மீது நவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பின்னரே அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த விவகாரம் குறித்து இரு தரப்பினரும் கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.