கொடநாடு டீ பேக்டரி விவகாரம்-அதிகாரிகள் இன்று ஆய்வு
இது குறித்து தமிழக அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 28ம் தேதி கோவையில் முதல்வர் கருணாநிதியுடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, செய்தியாளர் ஒருவர் கொடநாடு எஸ்டேட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒரு பெரிய டீ பேக்டரி கட்டி வருகிறார். அந்த டீ பேக்டரி அரசு விதி முறைகளை மீறி கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது என்றும், அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விக்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், இந்த செய்தி புதிரானது என்றும், எனினும் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சட்டரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, இந்தப் பிரச்சனை குறித்து உரிய முறையில் விசாரித்து உண்மைத் தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்தப் பிரச்சனை பற்றி பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டு அரசுக்கு விரைவில் அறிக்கை தருவார் என்று கூறப்பட்டிருந்தது.
இந் நிலையில் இன்று கொடநாடு எஸ்டேட் டீ பேக்டரி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் அங்கு குவிந்துள்ளனர். அதே போல அதிகாரிகளுக்கு ஆதரவாக திமுகவினரும் அங்கு குவிந்து வருகின்றனர். இதனால் கொடநாட்டில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.