ரெப்கோ வங்கிக்கு புதிதாக 25 கிளைகள்: திறந்து வைத்தார் ப. சிதம்பரம்
தேவகோட்டை: ரெப்கோ வங்கி புதிதாக 25 கிளைகளை திறந்துள்ளது. இதன் துவக்க விழா தேவகோட்டையில் நடந்தது. புதிய கிளைகளை மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,
ரெப்கோ வங்கி 1969-ம் ஆண்டு வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்புபவர்களின் மறுவாழ்வுக்காக தொடங்கப்பட்டது. மற்ற வங்கிகள் அனைத்தும் நிதித் துறையின் கீழ் இயங்க இந்த வங்கி மட்டும் உள்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது. ரெப்கோ வங்கி இன்று 25 புதிய கிளைகளை துவங்கியுள்ளது.
மாடமாளிகைகளில் வாழ்பவர்கள் யாரும் வங்கியில் கடன் பெற்று கறவை மாடு வாங்கி தொழில் செய்யப்போவதில்லை. ஏழை விவசாயிகளுக்கு கடன் கிடைத்தால் தான் மாடு, ஆடு போன்றவற்றை வளர்த்து பயனடைய முடியும்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் தாங்கள் பெறும் கடனில் 99 சதவிகித்தை திரும்பச் செலுத்திவிடுகின்றனர். இந்தியா அடுத்த ஆண்டு பொருளாதாரத்தில் 9 சதவிகித வளர்ச்சியை நிச்சயமாக பெறும்.
கடந்த நிதியாண்டில் ரெப்கோ வங்கி நிர்ணயிக்கப்பட்ட வணிகமான ரூ.3,500 கோடியைவிட அதிகமாக ரூ.216 கோடியும், நிகர லாபமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ.42 கோடியைவிட அதிகமாக ஒரு கோடி ரூபாயும் ஈட்டியுள்ளது.
இந்த வங்கியில் 446 நபர்களுக்கு ரூ.1 கோடியே 17 லட்சம் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று அவர் கூறினார்.