குருவாயூர்: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை, மீறினால் ரூ.500 அபராதம்
குருவாயூர்: கேரளாவில் உள்ள குருவாயூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அந்த நகராட்சி தடை விதித்துள்ளது. தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை கொண்டு வந்து உபயோகித்துவிட்டு அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகின்றனர். மக்கும் தன்மையில்லாத பிளாஸ்டிக்கால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுவருகிறது.
இதை தடுக்க, குருவாயூரில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்து, நகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
குருவாயூர் கோவில் நிர்வாகமும் இதற்கு ஒத்துழைப்பு அளித்துள்ளது. எனவே, இனி கோவில் பிரசாதங்களை பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பை அல்லது பேப்பரில் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுமட்டுமின்றி ஹோட்டல்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பயன்படுத்துபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் குருவாயூர் நகரசபை எச்சரித்துள்ளது. இந்தத் தடை ஜூலை 1ம் தேதி முதல் அமலில் உள்ளது.