சென்னையில் வட மாநில மாணவர்கள் பயங்கர மோதல்-ஒருவர் அடித்துக் கொலை
சென்னை: சென்னையில் வட மாநில மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஜார்க்கண்டைச் சேர்ந்த ஒருவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சத்யபாமா பல்கலைக்ழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் வட மாநில மாணவர்கள் படிக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் கல்வி வியாபாரிகளாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளனர். அதாவது இவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு தத்தமது மாநில மாணவர்களை சேர்த்து விட்டால் அவர்களுக்கு கமிஷன் தரப்படுகிறதாம்.
இதனால் மாணவர்களை சேர்ப்பதில் இந்த வட மாநில மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அதாவது கமிஷன் பெறுவது தொடர்பாக நடக்கும் மோதல்கள் இது.
இந்த அவல நிலை காரணமாக சமீப காலமாக சென்னை சுயநிதி பொறியியல் கல்லூரி வளாகங்களில் ரவுடிகள் போல இந்த வட மாநில மாணவர்கள் குழுக்கள் அமைத்து செயல்படத் தொடங்கியுள்ளனர். அடிக்கடி மோதல்களும் நடந்து வருகின்றன.
சமீபத்தில் வட மாநில கலெக்டர் ஒருவரின் மகனை இந்த கமிஷன் பெறுவது தொடர்பாக ஏற்பட்ட சிக்கலில் சில மாணவர்கள் கடத்திச் சென்றது நினைவிருக்கலாம். அந்த மாணவரை நீலாங்கரை போலீஸார் அதிரடியாக மீட்டு காப்பாற்றினர்.
இந்த நிலையில் நேற்று சத்யபாமா மற்றும் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கொலையே செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் பிடெக் மூன்றாமாண்டு படித்து வந்தவர் நிர்பேஷ் குமார் சிங். இவரது தந்தை ராஞ்சியில் ரயில்வே எஸ்.ஐயாக உள்ளார். இவருக்கும் சஞ்சீவ் சிங் என்ற இன்னொரு மாணவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்டைச் சேர்ந்த ஒரு மாணவரை எம்.ஜிஆர்.ப்ல்கலைக்கழகத்தில் சேர்க்க ஏற்பாடு செய்து வந்தார் குமார். ஆனால் சஞ்சீவ் சிங் முந்திக் கொண்டு அந்த மாணவரை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் சேர்த்து விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு சக மாணவரான அஜீத்குமார் சிங்குடன் பைக்கில் நீலாங்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தார் நிர்பேஷ் குமார். அப்போது அங்கு வந்த சஞ்சீவ் சிங்கும், இதர மாணவர்களும்,நிர்பேஷ் குமாரை உருட்டுக் கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நிர்பேஷ் குமார் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்பேஷ் குமாரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.