கள்ளக்குறிச்சியில் பயங்கரம்-மளிகைக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மளிகைக் கடை பெட்ரோல் குண்டு வீசித் தகர்க்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள நினையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி. மளிகைக் கடை வைத்துள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர். இருவருக்கும் நிலத் தகராறு உள்ளது.
இதுதொடர்பாக சமீபத்தில் நடந்த தாக்குதலில் கோவிந்தன் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில்தான் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் காசியின் மளிகைக்கடை மீது கோவிந்தனும், அவரது ஆட்களும் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் மளிகைக் கடை சிதறியது. தீப்பிடித்து எரிந்த கடையைப் பார்த்து காசி குடும்பத்தினர் கதறி அழுதனர்.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் தீயை போராடி அணைத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
தலைமறைவான கோவிந்தனையும், அவருடன் இருந்த 2 பேரையும் தேடி வருகின்றனர்.