என்எல்சி வேலைநிறுத்தம்: இன்றும் பேச்சுவார்த்தை
நெய்வேலி: என்எல்சி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை தொடர்பாக சென்னையில் இன்றும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது.
என்எல்சி தொழிலாளர்கள் ஜூன் 30 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து நிரந்தரத் தொழிலாளர்களும் பணிக்குச் செல்லவில்லை.
இதையடுத்து தொழிலாளர் சங்கங்களுடன் மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் சென்னையில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இதையடுத்து தொழிற்சங்கத்தினர் சனிக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந் நிலையில் மீண்டும் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர்.
அதே நேரத்தி்ல் இடதுசாரி சிஐடியூ தொழிற்சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு போலீஸர் அனுமதி தராததால் அது பாதியில் முடிந்தது.
இந் நிலையில் இன்றும் சென்னையில் முத்தரப்புப் பேச்சுவார்த்தை தொடர்கிறது.
இந் நிலையில் கடலூர் காங்கிரஸ் எம்பியான கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் பிரகாஷ் ஜெய்ஸ்வாலிடம் தொலைபேசியில் பேசினேன். அவரும் டெல்லி வந்து தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து மத்திய அமைச்சரை இன்று நேரில் சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கை குறித்து எடுத்துரைக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
அமைச்சர்கள் பேச்சு நடத்த வேண்டும்- ராமதாஸ்:
இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி நிலக்கரி நிறுவன தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசுக்கு சொந்தமான என்.எல்.சி. நிறுவனத்தில் 14,000க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தி வேலையில் ஈடுபடுத்துவதன் மூலம், வேலைநிறுத்தத்தை முறியடிக்க என்.எல்.சி. நிறுவனம் முயற்சிக்கிறது.
இதைக் கைவிட்டு, ஊதிய உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர என்.எல்.சி. நிர்வாகம் முன்வர வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களும் அரசு ஊழியர்கள்தான். ஆகவே, மத்திய அரசு ஊழியர்களுக்கான 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்த காலத்திலிருந்து, என்.எல்.சி. தொழிலாளர்களுக்கும் ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.1,200 கோடி லாபம் ஈட்டும் என்.எல்.சி. நிறுவனம், தொழிலாளர்களுக்கு ரூ.80 கோடி அளவுக்கு சலுகை வழங்க மறுப்பதும், அதன் காரணமாக வேலைநிறுத்தத்தை திணிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், பேச்சுவார்த்தைகளில் அமைச்சர்கள் கலந்து கொண்டு தீர்வு காண வேண்டும் என்று கூறியுள்ளார்.