சென்னை மேம்பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் அடையாளம் கண்டுபிடிப்பு
சென்னை: சென்னை நகரில் உள்ள 10 மேம்பாலங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலை விடுத்த நபரின் அடையாளம் போலீஸாருக்குத் தெரிந்துள்ளது. அவரை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
முக்கியப் பிரமுகர்கள், முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதை சிலர் பொழுது போக்க போல செய்ய ஆரம்பித்துள்ளனர். தங்களது கோபத்தை காட்ட இதை ஒரு ஆயுதமாக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஏற்படும் தேவையில்லாத பதட்டம் உள்ளிட்டவை குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை.
சமீபத்தில் கூட முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சென்னையில் உள்ள 10 மேம்பாலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11.45 மணிக்கு சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். சென்னையில் உள்ள 10 மேம்பாலங்களுக்கும், முக்கியமான சுரங்கப்பாதைகளுக்கும் டைம் பாம் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்தில் இந்த குண்டுகள் வெடித்து பாலங்களும், சுரங்கப் பாதைகளும் சிதறப்போகிறது என்று கூறி விட்டு போனை வைத்துள்ளார்.
நேற்று பந்த் வேறு நடந்து வந்ததால் இந்த மிரட்டலால் காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அனைத்து பாலங்களிலும் கண்காணிப்பும், ரோந்தும், சோதனையும் முடுக்கி விடப்பட்டது.
சோதனையில் குண்டு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அது புரளி எனத் தெரிய வந்தது.
இதையடுத்து தங்களுக்கு வந்த போன் அழைப்பு எங்கிருந்து வந்தது என்பதை போலீஸார் ஆராய்ந்தனர். அப்போது அது செல்போன் எண் என்றும், சூளைமேட்டில் உள்ள வினாயகபுரம் 2-வது தெருவை சேர்ந்த தேவதாசன் என்ற பெயரில் உள்ளதும் தெரிய வந்தது.
ஆனால் அந்த முகவரி போலியானது என்று போலீஸார் கண்டுபிடித்தனர். தொடர் விசாரணையில் அந்த நபரின் உண்மையான பெயர் ஜீவா என்பதும், அவருக்கு வயது 45 என்றும் தெரிய வந்தது.
அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் ஜீவா குறித்து விசாரித்தபோது, ஜீவாவுக்கு கவிதா என்ற மனைவி உள்ளதும், இருவரும் விவாகரத்து செய்து விட்டதும் தெரிய வந்தது.
கவிதா வடபழனியில் கம்ப்யூட்டர் மையம் வைத்துள்ளார். அவரை அணுகி போலீஸார் விசாரணை நடத்தியதில், ஜீவா குறித்து தனக்கு தெரியாது என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவே காணப்படுவார் என்றும் கவிதா கூறியுள்ளார்.
இதையடுத்து ஜீவாவை போலீஸார் தற்போது தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications