நக்சல் வேட்டையில் ராணுவம்ஈடுபடுத்தப் பட மாட்டாது-ஜி.கே.பிள்ளை
சட்டிஸ்கர்: நக்சலைட் வேட்டையில் ராணுவத்தை ஈடுபடுத்தும் எண்ணம் கிடையாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நக்சல் பாதித்த பகுதிகளில் ராணுவத்தை அனுப்பும் திட்டம் அரசிடம் இல்லை.
இதுகுறித்து சமீபத்தில் அமைச்சரவைக் குழு தீவிரமாக பரிசீலித்தது. இறுதியில், ராணுவத்தை அனுப்பும் அவசியம் ஏற்படவில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் நக்சலைட்களின் ஆதிக்கத்தை ஒடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நக்சலைட் பாதிப்பு உள்ள பகுதிகளில் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டத்தையும் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
நக்சலைட் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த கோரிக்கைக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி எதிர்த்து வருகிறார்.
இந்த நிலையில் ராணுவம் அனுப்பப்படாது என்று மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை கூறியிருப்பதன் மூலம் அரசின் நிலை தெளிவாக்கப்பட்டுள்ளது.