அரசு விழாக்கள் அரசியல் விழாக்களாக மாறுவதாக பேரூராட்சி தலைவர் புகார்
தென்காசி: அரசு விழாக்கள் அரசியல் விழாக்களாக மாறி வருகிறது என நெல்லை மாவட்டம் சாம்பவார் வடகரை பேரூராட்சித் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி அருகேயுள்ள சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் செல்வி, துணை தலைவர் மூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது,
சாம்பவர் வடகரை பேரூராட்சியில் ரூ.75 லட்சத்து 50 ஆயிரம் செலவில் வணிக வளாகம், கழிப்பிடம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிவடைந்துள்ளன. இப்பணிகள் முடிந்துள்ளதால் அனைத்து கவுன்சிலர்களும் இன்று கூடி மேற்படி கட்டடங்களின் திறப்பு விழாக்களை ஆடம்பரமாகவும், அரசியல் விழாக்களாகவும் நடத்த கூடாது, மக்கள் விழாவாக அமைய வேண்டும் என்று பேரூராட்சி மன்றத்தி்ல் தீர்மானம் நிறைவேற்றவுள்ளனர்.
ஆனால் இப்புதிய கட்டிடங்களை வருகிற 9-ம் தேதி அரசு விழாவாக நடத்திட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்திறப்பு விழாவுக்கு அமைச்சர் அழைக்கப்பட்டுள்ளார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் போலீஸ் மூலம் நெருக்கடி கொடுத்து பஞ்சாயத்து ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரை மிரட்டி வருகிறது. ஏற்கனவே இலவச டி.வி. வழங்கும் விழாவினை அரசியல் விழாவாக நடத்தியதால் நாங்கள் இம்முடிவை எடுத்துள்ளோம் என்றனர்.