பாஜகவின் பழைய பெருமையை மீட்டெடுங்கள்: அத்வானி
டெல்லி: பாஜகவி்ன் பழைய பெருமையை மீட்டெடுக்கும் பணியில் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் ஈடுபட வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி கூறினார்.
ஜன்சங் நிறுவனரான ஷ்யாமா பிரஸாத் முகர்ஜியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் அத்வானி பேசுகையில்,
பாஜகவுக்கு வித்தியாசமான கட்சி என்ற அடையாளத்தை முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஏற்படுத்தினார். அதை நாம் மீண்டும் கொண்டு வர வேண்டும்.
நாம் அனைவரும் அரசியலில் இருப்பது நமது தனிப்பட்ட ஆசை, அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்த நாட்டை மேம்படுத்துவதற்காகத் தான் நாம் அரசியலில், பொது வாழ்வில் இருக்கிறோம் என்பதை தொண்டர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் உணர்ந்து அதனடிப்படையில் செயல்பட வேண்டும்.
ஈடு இணையற்ற தலைவர்களை தாங்கள் பெற்றதற்காக கட்சித் தொண்டர்கள் உண்மையிலேயே பெருமைப்பட வேண்டும்.
கட்சித் தலைவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு முதலிடத்தைப் பிடிக்க முயற்சிப்பது சரியல்ல. நமக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும் ஒற்றுமையுடன் கட்சி முன்னேற்றத்துக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.
கட்சியின் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாததும், ஒவ்வொரு பிரச்சனையிலும் கட்சித் தலைவர்களின் வெவ்வேறு கருத்துக்களை வெளிபபடையாக தெரிவிப்பதும் நல்லதல்ல என்றார்.
இந்துக்களிடையே ஒற்றுமை வேண்டும்-ஜெயேந்திரர்:
இந் நிலையில் திருநெல்வேலியில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இந்துக்களிடேயே ஒற்றுமை வேண்டும். இந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் அரசியல்வாதிகள் பயப்படுவர். இந்துக்களிடம் ஒற்றுமையை வளர்க்கத்தான், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இயக்கங்கள் பாடுபடுகின்றன என்றார்.