ஷார்ஜாவில் 15 மாடி கட்டிடத்தில் திடீர் தீ-இந்தியர்கள் தப்பினர்
ஷார்ஜா: ஷார்ஜாவில் புதினா பகுதியில் உள்ள 15 மாடி கட்டிடத்தில் நேற்று காலை 6 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. ஒவ்வொரு மாடிக்கும் தீ வேகமாக பரவியது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் புகை மூட்டத்தால் மூச்சு தினறி எழுந்தனர். தீயை பார்த்ததும் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அவர்கள் தீயை அணைத்து முடிப்பதற்குள் 12 மாடிகள் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. ஆனால், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
இந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் வசிப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த விபத்தில் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கித் தவித்தவர்களை தீயணைப்பு படையினர் காப்பாற்றினர். விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.