சென்னை: கேஸ் ஆட்டோ வெடித்து சிதறி 2 பேர் படுகாயம்
சென்னை & மதுரை: சென்னையில் கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோ வெடித்துச் சிதறியதில் சிறுவன், முதியவர் படுகாயமடைந்தனர்.
சென்னை கே.கே.நகர் பச்சையப்பன் தெருவை சேர்ந்த ராஜு (40) கேஸ் மூலம் இயங்கும் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்று காலை கே.கே.நகரில் இருந்து 3 பேரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கொருக்குப்பேட்டை சென்றார்.
அங்கு அவர்களை இறக்கிவிட்டபோது கேஸ் கசிந்தது. இதையடுத்து கொருக்குப்பேட்டை ஒண்டிவீரன் கோவில் தெருவில் உள்ள மெக்கானிக்கிடம் ஆட்டோவை கொண்டு சென்றார்.
அங்கு கேஸ் கசிவை சரி செய்யும் முயற்சியில் மெக்கானிக் ஈடுபட்டபோது திடீரென ஆட்டோ வெடித்துச் சிதறி தீப்பிடித்துக் கொண்டது.
இதில் மெக்கானிக்கிடம் வேலை செய்யும் சிறுவன் கதிர், சாலையில் சைக்கிளில் சென்ற 60 வயது முதியவர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
வேன் மோதி ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 12 மாணவர்கள் காயம்:
இதற்கிடையே மதுரையில் விதிகளை மீறி ஷேர் ஆட்டோவில் ஏராளமான மாணவர்களை ஏற்றிச் சென்றபோது நடந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள பனைக்குளத்தில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகளை ஏற்றிக் கொண்டு ஒரு ஷேர் ஆட்டோ திருவாதவூருக்கு சென்றது.
அளவுக்கு அதிகமான மாணவ-மாணவிகளை ஏற்றிக் கொண்டு படுவேககத்தில் வந்த அந்த ஆட்டோ மீது இடையப்பட்டி என்ற இடத்தில் எதிரே வந்த வேன் மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் ஆண்டிச்சாமி உள்பட 12 பள்ளி மாணவ-மாணவிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications