சாதாரண குடுவையை சக்தி வாய்ந்தது என கூறி ரூ.10 லட்சத்திற்கு விற்ற இருவர் கைது
திருவனந்தபுரம்: சாதாரண குடுவையை சக்தி வாய்ந்தது என்று கூறி ரூ. 10 லட்சத்திற்கு விற்ற இரு மோசடிப் பேர்வழிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் புன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஹீம். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் வேலை செய்து வி்ட்டு ஊர் திரும்பினார். இவருடைய நண்பர் ஜெயபிரகாஷ்.
திருச்சூரில் ஒருவரிடம் அதிர்ஷ்ட கண்ணாடி குடுவை இருப்பதாகவும், அதை வாங்கி ஓராண்டு வீட்டில் வைத்தால் செல்வம் கொழிக்கும் என்றும் ரஹீமிடம் ஜெயபிரகாஷ் கூறினார். அதை நம்பிய ரஹீமை அவர் திருச்சூருக்கு அழைத்து சென்றார். அங்கு மோகனம் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
காலி கண்ணாடி குடுவையி்ல் தண்ணீரை கொதிக்க வைக்கும் ரசாயன பொடியை மோகனம் ஏற்கனவே போட்டு வைத்திருந்தார். அதில் தண்ணீரை ஊற்றியதும் தண்ணீர் கொதிக்க தொடங்கியது. இதை பார்த்த ரஹீம் அதை சக்தி வாய்ந்த குடுவை என நம்பி ரூ. 10 லட்சம் கொடுத்து 2 குடுவைகளை வாங்கினார். குடுவையை வீட்டில் வைத்து பலமாதங்கள் ஆகியும் எந்த மாற்றமும் இல்லை.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் திருச்சூரில் உள்ள ஒரு கடையில் அதே போன்று குடுவைகள் இருப்பதை ரஹீம் கண்டார். விசாரித்தபோது அவை வெறும் அலங்கார குடுவை என தெரிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரஹீம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் மாறு வேடத்தில் மோகனம் வீட்டுக்கு சென்று குடுவையை வாங்குவது போல் நடித்தனர். அதில் அவர்களின் மோசடி அம்பலமானது. இதையடுத்து மோகனத்தையும், ஜெயபிரகாஷையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.