தமிழகத்தில் மேலும் 42 பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி
சென்னை: தமிழகத்தில் 2010-11ம் கல்வியாண்டில் மேலும் 42 புதிய பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளிப்பது தொடர்பாக டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் ஏ.ஐ.சி.டி.இ தென் மண்டலத் தலைவரும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தருமான மன்னர் ஜவஹர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் இந்த புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஏற்கனவே 431 சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் கல்லூரிகளில் மொத்தம் 10,080 இடங்கள் உள்ளன.
இதில், சிறுபான்மை அல்லாத பொறியியல் கல்லூரிகள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மை கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் அரசு ஒதுக்கீட்டுக்கு அளிக்க வேண்டும்.
இதன்படி புதிய 42 கல்லூரிகள் திறக்கப்பட்டால் அரசு ஒதுக்கீட்டுக்கு மேலம் 5,500 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கலாம். தன்மூலம் இந்த ஆண்டு பி.இ. படிப்புகளில் உள்ள மொத்த இடங்களின் எண்ணிக்கை 1.15 லட்சமாக உயரவுள்ளது.
இந்த இடங்கள் இப்போது நடைபெறும் பி.இ. கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும்.
இது குறித்து மன்னர் ஜவஹர் கூறுகையில், புதிய கல்லூரிகள் சென்னை அருகிலும், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் அமையவுள்ளன. எல்லா கல்லூரிகளும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (இ.சி.இ.), கம்ப்யூட்டர் சயி்ன்ஸ் (சி.எஸ்.இ.) பாடப் பிரிவுகளைக் கோரியுள்ளன.
புதிய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அவற்றுக்கு சம்பந்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்களின் இணைப்பு தகுதி வழங்குவது அவசியம். அது தொடர்பான பணிகள் அடுத்த ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும். அதன் பின்னர், அந்தக் கல்லூரிகள் பி.இ. கலந்தாய்வில் உள்ள கல்லூரிகளின் பட்டியலில் இடம்பெறும்.
இவரை தவிர நேற்றைய கூட்டத்தில் 6 எம்.பி.ஏ. கல்லூரிகள், 1 கட்டடக் கலை கல்லூரி ஆகியவற்றுக்கும் ஏ.ஐ.சி.டி.இ. அனுமதி அளித்துள்ளது என்றார்.