ஏர் பிரேக் பைப்புகள் துண்டிப்பு-தமிழக எல்லையில் ரயிலை கவிழ்க்க சதி

கூடலூரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ளது நிலம்பூர் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உட்பட கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும் கர்நாடக மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நிலம்பூரிலிருந்து சொரனூருக்கு இயக்கப்படும் ரயில், புதன்கிழமை இரவு இங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
நேற்று காலை இந்த ரயிலை இயக்குவதற்காக ஓட்டுனர் ஆலிக்குட்டி, உதவி ஓட்டுனர் ஜான் ஆகியோர் ரயில் நிலையம் வந்தனர். ரயிலை இயக்கும் முன் வழக்கமாக செய்யும் சோதனைகளை அவர்கள் மேற்கொண்டனர்.
அப்போது இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான ஏர் பிரேக் பைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. 20 பைப்புகளை ஆக்ஸா பிளேடைக் கொண்டு ஒரு கும்பல் அறுத்துள்ளது.
இது குறித்து நிலம்பூர் போலீசுக்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. மலப்புரம் மாவட்ட எஸ்பி சேதுராமன், ரயில்வே டிஎஸ்பி கரீம் மற்றும் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
சரியான நேரத்தில் சதிச் செயல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்திலிருந்து ரயில் தப்பியுள்ளது. ரயில் ஓட ஆரம்பித்திருந்தால் பிரேக்குகள் செயல்படாமல் அதை நிறுத்துவதே இயலாத காரியமாகியிருக்கும்.
ரயில்வே இணையமைச்சர் அகமது இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications