சட்டசபைத் தேர்தல் வெற்றி-தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில்,
தொகுதி பொறுப்பாளர்களை சில நிர்வாகிகள் அலைக்கழிப்பதாகவும் ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் புகார்கள் வருகின்றன. தொகுதி பொறுப்பாளர்கள் கட்சி வளர்ச்சிப்பணிக்காக நியமிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் வேட்பாளர்கள் அல்ல. எனவே அவர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
தொகுதி பொறுப்பாளர்களுக்கு அனைத்து நிர்வாகிகளும் ஊக்கமும் ஒத்துழைப்பும் தரவேண்டும். பணிக்கு காலதாமதம் செய்தாலோ இடைறு செய்தாலோ அது கழகத்துக்கு எதிராக செயல்பட்டதாக கருத்தப்படும்.
தவறுகள் தொடர்ந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள். நிர்வாகிகள் ஒத்துழைப்பு தரமறுத்தால் அதற்கு மாவட்ட செயலாளர்கள்தான் பொறுப்பு.
தொகுதி பொறுப்பாளர்கள் வாரம் தோறும் செய்த பணிகளை கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும். அதை மாவட்ட செயலாளர்கள் தரவேண்டும் என வற்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தொகுதிக்கு ஒரு பொறுப்பாளரை விஜயகாந்த் நியமித்துள்ளார். இதுதவிர 3 வக்கீல்ளைக் கொண்ட வக்கீல் அணி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விவகாரங்களில் இவர்கள் கட்சியினருக்கு உதவியாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் கிளைவாரியாக,வார்டு வாரியாக தீவிரமாக பணியாற்றுமாறும், உடனடியாக பணிகளைத் தொடங்குமாறும் விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
கட்சிக்குப் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், வாக்காளர் பட்டியலை சரி பார்த்து புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். புதிய கிளைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகளை விஜயகாந்த் பிறப்பித்துள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி சேரப் போகிறார் என்று பெரும் பேச்சு நிலவி வரும் நிலையில் அனைத்துத்தொகுதிகளுக்கும் விஜயகாந்த் பொறுப்பாளர்களைப் போட்டு கட்சி மற்றும் தேர்தல் ஆயத்தப் பணிகளில் ஈடுபடுமாறு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.