மகளுடன் டிரைவர் கள்ளக்காதல்-கூலிப் படை வைத்து கொன்ற தொழிலதிபர்!

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்த 4 பேர் தந்த தகவலின் அடிப்படையில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவரை தொழிலதிபரின் மகன் சேர்ந்து கூலிப் படையை அனுப்பி கொன்றுள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேய்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த பாபு (25), மந்தைவெளிப்பாக்கத்தில் வசிக்கும் தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியிடம் கார் டிரைவராகப் பணியாற்றி வந்தார்.
இந் நிலையில் கடந்த 1ம் தேதி முதல் அவர் காணாமல் போனார். இது குறித்து பாபுவின் தந்தை அன்பழகன் கொடுத்த புகாரின்பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
துணை கமிஷனர் பெரியய்யா தலைமையிலான டீம் இந்த வழக்கில் படுவேகத்தில் விசாரணையை நடத்தியது. அப்போது அவர்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்து தொழிலதிபர் வீட்டின் ரகசியங்களையும் தோண்ட ஆரம்பித்தனர்.
மேலும் பாபுவை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் இந்த தனிப்படைக்கு ஏற்பட்டது. அந்தக் கோணத்தி்ல் விசாரணை
தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த கண்ணன் (37), பல்லாவரத்தை சேர்ந்த விஜயகுமார் (33), ஜான் (33) மற்றும் வேளச்சேரியை சேர்ந்த செந்தில் (33) ஆகியோருக்கு வலை வீசினர்.
இந் நிலையில் இந்த நால்வரும் நேற்று மாலை திடீரென செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எழிலரசி முன் சரணடைந்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில், தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி சொன்னபடி பாபுவை தீர்த்து கட்டினோம். இந்த வழக்கில் போலீசார் எங்களை தேடுவதாக அறிந்தோம். இதனால் சரணடைகிறோம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகள் தீபா, மகன் பிரதீப் மற்றும் வீட்டிலிருந்த சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது போலீசாருக்கு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கூலிப் படையை தொழிலதிபரின் கிருஷ்ணமூர்த்தி மகன் பிரதீப் அனுப்பியது உறுதியானதையடுத்து அவரையும் கிருஷ்ணமூர்த்தியையும் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ள விவரம்:
கிருஷ்ணமூர்த்தியின் மகள் தீபா கணவரைப் பிரிந்து வேளச்சேரியில் மகனுடன் தனியாக வசித்து வருகிறார். தீபா தனது தந்தைக்கு உதவியாக அவரது கார்கோ கிளியரன்ஸ் தொழில் நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.
தீபாவுக்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார் பாபு. இந் நிலையில் பாபு- தீபா இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வீட்டிலேயே அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதையறிந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிரதீப்பும் டிரைவர் பாபுவை கண்டிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து பாபுவை பிரதீப் கண்டித்துள்ளார்.
ஆனால், பாபு தனது கள்ளத் தொடர்பை விட முடியாது என்று கூறவே ஆத்திரமடைந்த பிரதீப் தனது தந்தை கிருஷ்ணமூர்த்தியின் கார் டிரைவரான கண்ணன் உதவியோடு ஒரு கூலிப்படையை அணுகியுள்ளார். 4 பேருக்கும் தலா ரூ.1 லட்சம் என்று கூலி பேசி, பணத்தைக் கொடுத்து பாபுவை கொல்ல உத்தரவிட்டார்.
இவர்கள் தீட்டிய திட்டப்படி கடந்த 1ம் தேதி பாபுவை பிரதீப் பல்லாவரத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கண்ணனின் வீட்டில் வைத்து பாபுவை இந்த 4 பேரும் கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து பிணத்தை ஒரு மூட்டையில் கட்டி காரில் கொடைக்கானலுக்கு எடுத்து சென்றுள்ளனர். அந்த காரில் கூலிப்படையுடன் கிருஷ்ணமூர்த்தியும் பிரதீப்பும் சென்றுள்ளனர்.
கொடைக்கானல் மலையில் அடர்ந்த காட்டுப் பகுதியில் பாபுவின் பிணத்தை வீசி விட்டுத் திரும்பி வந்துவிட்டனர்.
பாபு காணாமல் போனது குறித்து அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரித்தோது தீபாவுடனான அவரது கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்தது. இதையடுத்தே கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மேலும் கண்ணனின் செயல்பாடுகளையும் ரகசியமாக கண்காணித்து அவரது செல்போன், பிரதீப்பின் செல்போன் மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் செல்போனில் இருந்து சென்ற அழைப்புகளை வைத்து கூலிப் படையினரை போலீசார் அடையாளம் கண்டனர்.
தங்களை போலீசார் அடையாளம் கண்டுவிட்டதை உணர்ந்தே 4 பேரும் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து முழுமையாக விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து கொண்டு போலீசார் கொடைக்கானல் விரைந்துள்ளனர். அங்கு ஒரு பிணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அது பாபுவின் பிணம் தானா என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
முன்னதாக தீபாவை கார் டிரைவர் பாபு, தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததால் அவரைக் கொல்ல திட்டமிட்டதாக கிருஷ்ணமூர்த்தி போலீசாரிடம் கூறினார்.
ஆனால், தொடர் விசாரணையில் கள்ளக்காதல் விவகாரம் தான் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
இதற்கிடையே பாபு கொலை செய்யப்பட்ட விவரம் போலீசுக்கு தெரிய வரவே 4 பேரும் கோர்ட்டில் சரண் அடைந்து விட்டனர்.












Click it and Unblock the Notifications