அகதிகளை முறைகேடாக வெளிநாடுகளுக்கு அனுப்பிய விடுதலைப் புலி கைது
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 37 பேரை கடந்த மே 7ம் தேதி போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக இலங்கை திருகோண மலையை சேர்ந்த டென்னீசன், குளச்சலை சேர்ந்த ஆண்டானி மில்லர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
இவர்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக தங்கியிருப்பவர்களை கேரளாவுக்கு அழைத்து வந்து அங்கிருந்து போலி பாஸ்போர்ட் மூலமாக விமானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கன்னியாகுமரியில் இருந்தும் படகு மூலமும் அகதிகளை பல்வேறு பகுதிகளுக்கு கடத்தி சென்றுள்ளனர்.
இந்த கடத்தலுக்கு இலங்கையை சேர்ந்த சிவம் என்ற பராபரன் என்பவர் முக்கிய தலைவராக செயல்பட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில் கொல்லத்தில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த பராபரனை கொல்லம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் மத்திய, மாநில உளவு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் எல்டிடிஇ அமைப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.