சாலையோர ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க சிவசேனா கடும் எதிர்ப்பு
மதுரை: தமிழகத்தில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்பு கோயில்களை இடிக்க சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து மதுரையில் தமிழக சிவசேனா தலைவர் குமாரராஜா கூறியதாவது:
சாலைகளை விரிவுபடுத்தும் போது அங்குள்ள கோயில்களை இடிக்கும் முன்பு முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர்களிடம் விளக்கம் பெற வேண்டும். பின்பு, கோயிலுக்கு மாற்று இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் கூறியுள்ளது.
ஆனால்,அந்த உத்தரவுகளை பின்பற்றாமல் தமிழகத்தில் பல்வேறு கோயில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. இதை கண்டித்து சென்னையில் ஜூலை 23- ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
மேலும், ரூபாய் நோட்டுகளில் மத பிரசாரம் செய்வதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். அத்தகைய நோட்டுகளை பறிமுதல் செய்து ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.
உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க மத்திய அரசு உடனே சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார் அவர்.