புதுச்சேரியில் ஆள்மாறாட்டத்தி்ல் சென்னை கப்பல் கேப்டன் வெடிகுண்டு வீசி கொலை
புதுச்சேரி: சென்னையை சேர்ந்த கப்பல் கேப்டன் புதுச்சேரியில் ஆள்மாறாட்டத்தில் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உத்தண்டியைச் விஜயரங்கம் ( 55), சரக்கு கப்பலில் கேப்டனாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்துமதி. இவர்களது மகன் சாரதிக்கு வரும் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது.
புதுச்சேரியில் உள்ள உறவினர்கள், நண்பர்களை நிச்சயதார்த்ததுக்கு அழைக்க நேற்று புதுச்சேரி வந்தார் விஜயரங்கம். நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் குருசுக்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் இரவில் சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள உடற்பயிற்சி நிலையம் அருகே சென்றபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரது முதுகு மீது வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியோடியது. இதில் விஜயரங்கம் நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தில் விஜயரங்கத்தின் மார்பு, முதுகு பகுதியில் பலத்த காயமேற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து அங்கேயே இறந்தார்.
சம்பவம் இடத்துக்கு வந்த முத்தியால்பேட்டை போலீசார் சந்தேகத்தின் பேரில் அருகே இருந்த உடற்பயிற்சி நிலையத்தை சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 2 நாட்டு வெடிகுண்டுகள், இரண்டு பெரிய அரிவாள்கள் சிக்கின.
இந்தக் கொலை தொடர்பாக புதுவை குருசுகுப்பத்தில் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்தபோது தான் விஜயரங்கம் ஆள் மாறாட்டத்தில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
குருசுகுப்பம் மீனவ குப்பத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பஞ்சநாதனுக்கும் இன்னொரு பிரிவினருக்கும் நீண்ட நாட்களாகவே முன்விரோதம் இருந்து வருகிறது.
இதில் பஞ்சநாதனை கொலை செய்ய எதிர்கோஷ்டி திட்டமிட்டிருந்தது. அவரை தீர்த்துக் கட்டுவதற்காக உடற்பயிற்சி கூடம் அருகே இந்தக் கும்பலைச் சேர்ந்த 4 பேர் பதுங்கியிருந்தனர்.
பஞ்சநாதன் அங்கு மோட்டார் சைக்கிளில் வருவதாக அவர்களுக்கு தகவல் தரப்பட்டது. இந்தக் கும்பல் மோட்டார் சைக்கிளை எதிர்பார்த்து காத்திருந்தபோது எதிர்பாராத விதமாக விஜயரங்கம் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அவர் உடற்பயிற்சி கூடத்தை கடந்தபோது இந்தக் கும்பல் வெடிகுண்டுகளை வீசி கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications