போலீஸ் பாதுகாப்புடன் காஞ்சி கோவிலில் வழிபட்ட விடுதலைப் புலி போராளி
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்தியதாக கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் திலீபன் என்பவரை சென்னை அருகே கியூ பிரஞ்ச் போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி சிறப்பு முகாமில் இவர் அடைக்கப்பட்டார்.
நேற்று காலை 10.30 மணிக்கு போலீஸ் வேனில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு திலீபன் அழைத்து வரப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக டிஎஸ்பி சாம்பசிவம் தலைமையில் 10 போலீசார் உடன் வந்தனர். போலீசார், திலீபனை நேரடியாக பக்தர்கள் வெளியே வரும் வாசல் வழியாக கோவில் உள்ளே அழைத்து சென்றனர்.
கோவிலுக்குள் சென்ற திலீபன் கருவறைக்கு முன்புள்ள அறையில் அமர்ந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினார். கோவிலில் உச்சிகால பூஜை அபிஷேகத்திற்கு பணம் செலுத்தியிருந்தார். அபிஷேகம் முடிந்ததும் அம்மனுக்கு பட்டுப் புடவை சாத்தி வழிபட்டார்.
வழிபாடு முடிந்து புறப்படும் போது கோவில் ஸ்தானீகர்களிடம் தாலிக் கயிறு இருந்தால் அம்மன் பாதத்தில் வைத்து கொடுக்கும்படி கோரினார். அவர்களும் இரண்டு தாலி கயிறுகளை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்த பின் அவரிடம் வழங்கினர்.
தாலிக்கயிறு மற்றும் பிரசாதத்தை திலீபன் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டார். பகல் 12.30 மணிக்கு திலீபன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். திருமண தடை நீங்க வேண்டும் என்பதற்காக திலீபன் கோவிலுக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.