செல்வத்தின் 'கிரைம் பைல்'-ஆடிப்போன காங்.-'அட்மிஷன் பைல்' தள்ளிவைப்பு!

கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் செல்வம். பின்னர் திருமாவளவனுடன் பிணக்கு ஏற்படவே கட்சியை விட்டு வெளியேறினார்.
இருப்பினும் எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்யவில்லை. தொடர்நது எம்.எல்.ஏ. பதவியை உடும்புப் பிடியாக பிடித்து வைத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகளை விட்டு விலகிய பின்னர் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அங்கு பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அவர் சமீபத்தில் கட்சியை விட்டு தூக்கப்பட்டார். இந்த நிலையில் தனது ஆதரவாளர்களோடு காங்கிரஸில் போய்ச் சேர ஆர்வம் தெரிவித்துள்ளார் செல்வம்.
டெல்லி சென்ற செல்வம் இதுதொடர்பாக குலாம் நபி ஆசாத்தை சந்தித்துப் பேசினர். இதையடுத்து நேற்றே டெல்லியில் வைத்து ப.சிதம்பரம் உள்ளிட்டோர் முன்னிலையில் அவர் காங்கிரஸில் சேரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் குழப்பம் ஏற்பட்டது. பிற்பகலில் அவர் சேருவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை.
மாறாக இரவு 8 மணியவில் மீண்டும் குலாம் நபி ஆசாத்தை செல்வம் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் இதுகுறித்து இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன திவேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், செல்வபெருந்தகை மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கான தங்கள் கருத்தை தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சி அவர்களை வரவேற்கிறது. விரைவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் விழாவில் முறைப்படி அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று கூறினார்.
நேற்றே செல்வம் காங்கிரஸில் சேரவிருந்த நிலையில் திடீரென தள்ளிப் போனதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து கிளம்பிய எதிர்ப்புகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியி்ல செல்வம் நம்பர் 2 தலைவராக இருந்தபோது பல அடிதடி வழக்குகள், கொலை முயற்சி, கொலை முயற்சி என பல வழக்குகளில் தொடர்பு கொண்டிருந்தார்.
புதிய தமிழகம் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டது, புரட்சி பாரதம் பிரமுகர் கொலை செய்யப்பட்டது, வெடிகுண்டு வீச்சு, குண்டர் சட்டத்தில் கைதானது உள்பட பல்வேறு வழக்குகள் பற்றிய மொத்த தகவல்களையும் காங்கிரஸ் கட்சியின் தமிழக பிரிவு டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டது.
செல்வம் தொடர்பான கிரைம் பைலைப் பார்த்த டெல்லி தலைமை ஆடிப் போய் விட்டதாம். இதனால் அவசரப்பட்டு முடிவெடுக்க விரும்பாமல் செல்வத்தின் சேர்க்கையை தள்ளிப் போட்டு விட்டனராம்.












Click it and Unblock the Notifications