ஓராண்டில் 10 கோடி பேருக்கு தேசிய அடையாள எண் அட்டை
டெல்லி: அடுத்த ஓராண்டில் 10 கோடி பேருக்கு தேசிய அடையாள எண் அட்டை வழங்கப்படவுள்ளது.
இந்தியர்கள் அனைவருக்கும் 12 இலக்கம் கொண்ட தேசிய அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக இன்போசிஸ் முன்னாள் தலைவர் நந்தன் நிலேகணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் திட்டத்துக்கான நிதித்துறை செலவுக் கணக்கு கமிட்டி கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடந்தது. அதில், நடப்பாண்டில் 10 கோடி பேருக்கு தேசிய அடையாள எண் வழங்கவும், அடுத்த 4 ஆண்டுகளில் 60 கோடி பேருக்கு அடையாள எண் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்த மாபெரும் திட்டத்துக்காக ஆணையத்துக்கு 2010-11ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், முதற்கட்ட பணிகளுக்கே ரூ.6,500 கோடி தேவை என்று ஆணையம் கோரியுள்ளது.
முதலில் இதை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்க மறுத்ததால், இத் திட்டமே ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. இதையடுத்து பிரதமரின் தலையீட்டின்பேரில் போதிய நிதி வழங்க முகர்ஜி ஒப்புக் கொண்டுவிட்டார்.
இதையடுத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அடையாள அட்டை வழங்கும் பணி துவங்கிவிடும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது ஆந்திரம், கர்நாடகம், பிகார் மாநிலங்களில் சோதனை அடிப்படையில் தேசிய அடையாள எண் வழங்கும் பணிகள் நடைபெற்று வருவது குறி்ப்பிடத்தக்கது.
இந்த அடையாள அட்டையில் பொதுமக்களின் அடையாளம் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படவுள்ளது.
தமிழகத்தில் சென்ஸஸ் கணக்கெடுப்பு காலம் நீட்டிப்பு?:
இதற்கிடையே தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புக் காலத்தை நீட்டிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணி ஜூன் 1ம் தேதி தொடங்கியது. இந்தப் பணிகளை ஜூலை 15ம் தேதிக்குள் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் தொகை கணக்கெடுப்புத்துறை பரிசீலனை செய்து வருகிறது.