கார் இறக்குமதி: சசிகலா கணவர் நடராஜன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு-26ம் தேதி தீர்ப்பு
சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜன், வெளிநாட்டில் இருந்து லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் லண்டனில் இருந்து லெக்ஸஸ் காரை இறக்குமதி செய்தார்.
அப்போது அந்த கார், பயன்படுத்திய பழைய கார் என்று கணக்கு காட்டி குறைவான வரி கட்டப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக கார் ஆவணங்கள் சுங்கத்துறையினர் ஆய்வு செய்தபோது அது புத்தம் புதிய கார் என்று தெரியவந்தது. வரி ஏய்ப்பு செய்வதற்காக அதை பழைய கார் போல காட்ட போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்திருப்பதும் உறுதியானது.
இது குறித்து சுங்கத்துறை வழக்குத் தொடர்ந்தது. பிறகு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
நடராஜன், அவரது மருமகன் பாஸ்கரன், வங்கி மேலாளர் சுசித்ரா, லண்டன் தொழிலதிபர் பாலகிருஷ்ணன், அவரது மகன் யோகி ஆகியோர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.
இதில் பாலகிருஷ்ணனும், யோகியும் வழக்கு பதிவுச் செய்யப்பட்ட 1997ம் ஆண்டு முதலே தலைமறைவாக உள்ளனர்.
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
வாதங்கள் முடிவடைந்த நிலையில் வரும் 26ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவி்க்கப்பட்டுள்ளது.