ஐ.நா.வையே எதிர்க்கிற இலங்கை தூதரகங்களை இழுத்து மூடுவோம்-திருமா
சென்னை: ஐ.நா. சபையையே எதிர்க்கும் இலங்கை அரசின் தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களை இந்தியாவில் செயல்பட விடக் கூடாது. அவற்றை இந்திய அரசே இழுத்து மூட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மூடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை அப்புறப்படுத்தக் கோரியும், சென்னையில் நேற்று திருமாவளவன் தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது திருமாவளவன் பேசுகையில்,
மீனவர் செல்லப்பன் சமீபத்தில் சிங்கள கடற்படையால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் நேற்று முன்தினம் மீண்டும் கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது சிங்கள படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்த பிறகும் இந்த தாக்குதல் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மீனவர்கள், தொடர்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். 25 ஆண்டு காலமாக பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
கடந்த 5 வருடமாக தமிழக மீனவர்கள் 100க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர். அதுபற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.
இலங்கை அரசை இந்திய அரசு கடும் எச்சரிக்கை செய்து தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை அரசுடன் இந்திய அரசு எந்த ஒரு ஒப்பந்தம் செய்தாலும் தமிழக முதல்வர் கருணாநிதியை கலந்து பேசிதான் கையெழுத்திட வேண்டும்.
இதுவரை 7 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதுபற்றி முதல்வர் கருணாநிதியுடன் கலந்து பேசவில்லை. மேலும் இலங்கையில் ஐ.நா.சபை அலுவலகம் இழுத்து மூடுவதற்கும் மனித உரிமை மீறல்களை ஆராய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட குழுவை அனுமதிக்க கூடாது என்றும் இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையையே எதிர்க்கிற இலங்கை அரசின் தூதரங்களை இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சென்னையில் உள்ள தூதரகத்தையும் உடனே அகற்ற வேண்டும். மத்திய அரசு இதை அப்புறப்படுத்தாவிட்டால் பொது மக்களை திரட்டி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications