விடுதலைப் புலிகள் தலைநகரில் இலங்கை அரசின் அமைச்சரவைக் கூட்டம்
ராஜபக்சே அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.
பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைநகரமாக திகழ்ந்தது
கிளிநொச்சி நகரம். இங்குதான் பலமுக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. ஈழப் போரின்
இறுதிக்கட்டத்தில் கிளிநொச்சி சிங்களப் படைகளிடம் வீழ்ந்தது.
தற்போது ராணுவத்தின் பிடியில் உள்ள கிளிநொச்சியில் அமைச்சரவைக் கூட்டத்தை
நடத்தி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்பினார் ராஜபக்சே. இதையடுத்து அங்கு
அமைச்சரவைக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது.
கூட்டத்தில் ராஜபக்சே தமிழில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர்
செய்தியாளர்களிடம் ராஜபக்சே பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்த பகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
கிளிநொச்சி, முல்லைதீவு பகுதிகள் முன்பு பின்தங்கிய பகுதியாக இருந்தன. இனி இந்த
நிலை மாறிவிடும்.
எனக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதான். எல்லா மக்களுக்கும் ஒரே மாதிரி வசதி
வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். சமத்துவம், சமஉரிமை, ஒரே
நாடு, ஒரே மக்கள், ஒரே நீதி இதுதான் எனது வழி. நாட்டில் எல்லோரும் சுய
கவுரவத்துடன் வாழ வேண்டும். அதை நான் நிறைவேற்றுவேன்.
இனவாதம், பிரிவினைவாதம், இனி வேண்டாம். இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று
யாரும் இல்லை. நாட்டின் மீது அன்பு செலுத்தும் அனைவரும் இலங்கை மக்களே.
எப்போதும் ஜனநாயகம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்களை தவறான
வழிகளில் கொண்டு செல்லக்கூடாது என்றார்.