ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் விவசாயம் பாதிப்பு: கொங்குநாடு முன்னேற்ற கழகம்
சென்னை: மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், இதனால், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 100 ரூபாய் கூலியை வேலைக்கு வரச் சொல்லாமலேயே வழங்க வேண்டும் என்றும் கொங்குநாடு முன்னேற்ற கழகம் கோரியுள்ளது.
இது குறித்து அதன் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருடத்துக்கு 150 நாட்களுக்கு தினமும் 100 ரூபாய் ஊதியம் கொடுக்கப்படுகிறது. 365 நாட்களுக்கு கணக்குப் பார்க்கும்போது தினசரி ரூ. 40 மட்டும்தான் வறுமைக் கோட்டுக் கீழே உள்ளவர்களுக்கு கிடைக்கிறது.
தினசரி ரூ. 40 என்பது மிகவும் குறைவு. இதை இலவசமாகவே கொடுக்கலாம். அவரவர் செய்கின்ற வேலை விவசாயமாக இருந்தாலும், விசைத்தறியாக இருந்தாலும் தொடர்ந்து செய்வார்கள். அது பிழைக்க வழி பிறக்கும்.
வெளிநாடுகளில் வேலையில்லாதவர்களுக்கு இப்படித்தான் செய்கிறார்கள். வேலைக்கு வரச் சொல்வதில்லை. ரூ. 40 ஒரு நாளைக்கு என்பது இந்தியத் திருநாட்டில் பிறந்தவனின் பிறப்புரிமை. ரூ. 100 வேலைக்கு வரச் செய்து சோம்பேறியாக்க வேண்டிய அவசியமில்லை.
இதனால் விவசாயப் பொருள் உற்பத்தி பாதிக்காது. விலைவாசி ஏறாது. விலைவாசி ஏறாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மத்திய-மாநில அரசுகள் கூட்டம் போட்டு ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை.
பல இடங்களில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் செய்யப்படுகின்ற பணிகள் ரூ.25 லட்சம் செலவாகிறதென்றால், அதையே இயந்திரத்தை வைத்து ரூ. 3 லட்சத்தில் முடிக்கக்கூடியதாக இருக்கிறது. இதை அதிகாரிகள் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் விவசாயத்திற்கு பயன்பட வேண்டும். இல்லையென்றால் நடக்காத வேலைக்கு வரச் சொல்லாமல் பணம் கொடுக்கப்பட வேண்டும்.
அரசு உடனே ஒரு குழுவை நியமித்து அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து வருகின்ற உதவி மக்களைச் சென்றடையவும் வேண்டும். விவசாயமும் மற்ற தொழில்களும் பாதுகாக்கப்படவும் வேண்டும்.
ரூ. 100 வாங்குகின்றவன் சோம்பேறியாக இருப்பதை விட வேறு வேலைக்கு சென்றால் இன்னும் ஒரு ரூ. 200 கிடைக்கும். மொத்தம் வருமானம் ரூ. 300ஆக இருக்கும். அதே சமயம் விவசாய உற்பத்தியும் பாதிக்காமல் விலைவாசியும் குறையும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications